3 மாத குழந்தைக்கு கடினமான இதய ஆபரேஷன்: வெற்றிகரமாக செய்து பெங்களூர் டாக்டர்கள் சாதனை
பெங்களூர்: விநோத இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 3 மாத சிறுவனுக்கு கடினமான ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர் பெங்களூர் மருத்துவர்கள்.
பிறக்கும் போதே இதயத்தில் ஓட்டையுடன் பிறந்த சிறுவன் ஆயுஷ்க்கு தற்போது மூன்று மாதங்கள் ஆகிறது. தினக் கூலியான அவனது பெற்றோர் அவனை பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அவனை ஆய்வு செய்த மருத்துவர்கள், அவனுக்கு வந்திருப்பது மிக அரிதான இதய நோய் என்பதைக் கண்டறிந்தனர்.
இது குறித்து ஆயுஷின் தாத்தா சுகுமார் கூறுகையில், ‘ ஆயுஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவனது இதயத்தில் ஒரு ஓட்டை இருப்பதாகவும், மேலும் அவனது இதய நரம்புகள் இணைந்திருப்பதாகவும் தெரிவித்தனர். நாங்கள் ஆபரேஷன் மூலம் அதனை சரி செய்ய முயற்சி செய்கிறோம், ஆனால் அதற்கு நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகலாம் என தெரிவித்தனர். இதனைக் கேட்டவுடன் நாங்கள் அனைவரும் பயத்தில் அழ ஆரம்பித்து விட்டோம்' எனத் தெரிவித்துள்ளார்.
ஆயுஷின் ரத்தக் குழாய்களில் பிரச்சினை இருந்ததாகவும், அதன் மூலம் எந்நேரமும் அவனுக்கு ஹார்ட் அட்டாக் நேரலாம் என அச்சம் தெரிவித்த மருத்துவர்கள் இந்த ஆபரேஷனைச் சவாலாக எடுத்துச் செய்து வெற்றி கண்டுள்ளனர்.
பெங்களூரில் உள்ள ராமைய்யா மருத்துவமனையின் இதய அறுவைச் சிகிச்சை நிபுணரான ரவி சங்கர் ஷெட்டி இது குறித்து கூறுகையில், ‘இதுவரை இது போன்ற குறைபாடுகள் உலகத்திலேயே 50 தான் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அவற்றிலும் பெரும்பான்மையானவை பிரேத பரிசோதனையின் மூலமே தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 5 நபர்களுக்கு மட்டுமே முன்கூட்டியே கண்உபிடிக்கப் பட்டு வெற்றிகரமாக ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ் அதிர்ஷ்டசாலி' எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது சகஜ நிலைக்கு திரும்பி வரும் ஆயுஷ், இன்னும் சில வருடங்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியமாம். ஆனால், அவன் விரைவாக முழு ஆரோக்கியம் அடைந்து விடுவான் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.