இளவரசன் உடலை ஆய்வு செய்ய மருத்துவர்! அறிக்கைக்குப்பின் மறு பிரேத பரிசோதனை குறித்து முடிவு!!
இளவரசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் தனபால், சி.டி.செல்வம் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் பிரேத பரிசோதனை வீடியோ காட்சிகளை நேற்று நீதிபதிகள் வி.தனபால், சி.டி.செல்வம் ஆகியோர், மற்றும் ஏழு மருத்துவர்கள் அடங்கிய குழு பார்வையிட்டனர். இவர்களில் ஆறு பேர் மறு பிரேத பரிசோதனை செய்யத் தேவையில்லை எனக் கூறினர். ஆனால் ஒரே ஒரு மருத்துவர் மட்டும் மறு பிரேத பரிசோதனை அவசியம் என தெரிவித்திருந்தார். இக்கருத்துகளைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் விசாரணை தொடங்கியது.
விசாரணையின் போது இளவரசின் உடலை ஆய்வு செய்ய மருத்துவர் ஒருவரது பெயரை பரிந்துரைக்குமாறு தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவர் பெயரை பரிந்துரைக்க கூறப்பட்டது. ஒருவழியாக சென்னை தனியார் மருத்துவமனை மருத்துவர் சம்பத்குமார் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இதைத் தெரிவித்த நீதிபதிகள், இளவரசன் உடலை நாளை சம்பத்குமார் பரிசோதனை செய்வார். நாளை மறுநாள் அவர் தமது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார். அதன்பின்னர் மறுபிரேத பரிசோதனை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றனர்.