நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்..3வது சிபிஐ வழக்கறிஞர் விலகல்!
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது உச்சநீதிமன்றம். சிபிஐயின் விசாரணை அறிக்கையை மத்திய அரசுடன் பகிர்ந்து கொண்டதற்கு கடும் கண்டனமும் தெரிவித்தது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜராகி வந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரன் ராவல் விலகிக் கொண்டார்.
பின்னர் மூத்த வழக்கறிஞர் யு.யு. லலித் நியமிக்கப்பட்டார். ஆனால் ஜிண்டால் குழுமத்தின் வழக்கறிஞராக இதே உச்சநீதிமன்றத்தில் ஆஜரானவர் லலித். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஜிண்டால் குழுமம் மீதும் புகார் உள்ளது. இதனால் லலித்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே அவரும் விலகிக் கொண்டார்.இந்நிலையில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் நியமிக்கப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தில் நேற்று நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கின் விசாரணையின் போது சுரங்க உரிம ஒதுக்கீடு தொடர்பான கூட்ட விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது சித்தார்த்தும் விலகிக் கொண்டிருக்கிறார். இதனால் அடுத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் யார்? அவரும் எத்தனை காலம் வழக்கில் ஆஜராவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.