இந்து முறைப்படி ஏற்கனவே திருமணம் ஆனவரை மறுமணம் செய்யக் கூடாது : மும்பை கோர்ட் அதிரடி
மும்பை: ஏற்கனவே, திருமணம் ஆனவரை மறுமணம் செய்யக் கோரி மும்பை பெண் தொடர்ந்த வழக்கில், இந்து திருமண சட்டப்படி திருமணம் ஆன குடும்பஸ்தனை அப்பெண் மறுமணம் செய்யக் கூடாது என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர் நீதிபதிகள்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜஸ்ரீ. இவர் பிரசாந்த் மர்டே என்ற போலீஸ் உயரதிகாரியுடன் கடந்த 14 ஆண்டுகளாக ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தான் பிரசாந்த்தை முறைப்படி கணவனாக்கிக் கொள்ளும் நோக்கத்தில், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
இதில், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி பிரசாந்த் சார்பில் ஆஜரான வக்கீல், 'எனது கட்சிக்காரருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. எனவே, இந்து திருமண சட்டத்தின்படி ராஜஸ்ரீயை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்வது சாத்தியமற்றது. எனது கட்சிக்காரருக்கு தொடர்ந்து ராஜஸ்ரீ தொல்லை கொடுத்து வருவதால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகிறார். எனது கட்சிக்காரரின் வாழ்க்கையில் இனி ராஜஸ்ரீ தலையிடக்கூடாது என்று உத்தரவிடவேண்டும்' என ராஜஸ்ரீக்கு எதிராக வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, தீர்ப்பு கூறிய மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி மோஹித் ஷா, நீதிபதி சாதனா ஜாதவ் ஆகியோர் 'ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வாழும் இந்து மதத்தை சேர்ந்த ஒரு நபரை இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைப்பதை இந்து திருமண சட்டம் அனுமதிக்கவில்லை. எனவே, இவ்வழக்கில் மனுதாரருக்கு நிவாரணம் அளிக்க இயலாது' என்று அதிரடியாக கூறியுள்ளனர்.