மத்திய அமைச்சரை தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மேற்கு வங்கத்தில் பரபரப்பு
கொல்கத்தா: மத்திய அமைச்சர் அபு ஹசீம் கான் செளத்ரி,மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்க மாநிலத்தில் 5 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்து வருகிறது. இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் மீதமுள்ள பகுதிகளுக்கு ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் பரபரப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரம் குடும்பநலத்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் அபு ஹசீம் கான் செளத்ரி, மால்டா மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது காலியாசாக் என்ற பகுதியில் சந்தேகத்திற்கிடமான மர்மநபர்கள் சில அமைச்சரின் காரை தாக்கினர். இதில் அமைச்சரின் பாதுகாவல்கள், காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அமைச்சருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அவர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
3 பேர் பலி
இதனிடையே மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலையொட்டி நிகழ்ந்த வன்முறையில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரின் கணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். திங்கள்கிழமை இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மூன்று மாவட்டங்களில் நடைபெற்றது.
அப்போது நிகழ்ந்த வன்முறைச் செயல்களில் 3 பேர் உயிரிழந்ததாக மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் தபஸ் பாய் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களில் முகமது ஷேக் ஹஸ்மத் என்பவர், பர்த்வான் மாவட்டத்தில் உள்ள மதுடாங்கா கிராமப் பஞ்சாயத்தில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மோனோவாரா பீபியின் கணவர் ஆவார். வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றபோது அவர் மீது சிலர் வெடிகுண்டுகளை வீசினர். இதில் அவர் இறந்தார்.
பாடாஷ்பூர் பகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஒருவரின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத சிலர் சூறையாடினர். ஹூக்ளி மாவட்டத்திலும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன.
இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்ற கிழக்கு மிதுனபுரி, ஹூக்ளி, பர்த்வான் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 75 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.