காங்.-ன் மதச்சார்பின்மை பற்றியெல்லாம் பேசாதீங்க.. மோடிக்கு யஷ்வந்த் சின்ஹா அட்வைஸ்
புனேயில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பேரணியில் பேசிய மோடி, மதச்சார்பின்மை எனும் முகமூடியை காங்கிரஸ் அணிந்து கொண்டிருக்கிறது என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் மிகக் கடுமையாக பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான், உங்களுடைய அம்மணமான மதவாதத்தை விட எங்களது மதச்சார்பின்மை முகமூடி பரவாயில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியில் இருந்தே அட்வைஸ் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்ஹா, ஊழல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி தொய்வடைந்து வருகிறது. ரூபாய் மதிப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் சரிந்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மோசமான கொள்கைகளே காரணம். இதனால் காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பின்மை குறித்து பேசி முக்கிய பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்றார்.