ஜூலை 20 முதல் கேரளாவுக்கு லாரிகள் ஓடாது : லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு
கோவை: வாளையார் சோதனைச் சாவடியில் ஏற்படும் காலதாமதத்தைக் கண்டித்து வரும் 20ஆம் தேதி முதல் கேரளாவுக்கு லாரிகள் இயக்கப்பட மாட்டாது என்று அகில இந்திய லாரி உரிமையாளர் சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக, கேரள எல்லையில் உள்ள வாளையாறு சோதனை சாவடிகளில் லாரிகள் கடந்து செல்ல கடும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த சோதனை சாவடிகளை, லாரிகள் கடந்து செல்ல 20 முதல் 30 மணி நேரம் ஆவதால் லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். சோதனைச் சாவடி அருகிலேயே சமைத்து சாப்பிட்டும், உறங்கியும் பொழுதை கழிக்கவேண்டியுள்ளது.
காலதாமதத்தை குறைக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கேரள அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என டெல்லியில் நடந்த அகில இந்திய லாரி உரிமையாளர் சம்மேளனத்தில் முடிவு செய்யப்பட்டது.
அகில இந்திய லாரி உரிமையாளர் சம்மேளன முன்னாள் தலைவரும், கர்நாடக மாநில லாரி உரிமையாளர் சங்க தலைவரான சண்முகப்பா கூறும்போது, பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத கேரள அரசை கண்டித்து திட்டமிட்டபடி வரும் 20ஆம் தேதி முதல் கேரளாவிற்கு இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் லாரிகள் இயக்கப்படமாட்டாது என்றார்.
கேரளாவிற்கு தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் லாரிகள் மூலமே கொண்டு செல்லப்படுகின்றன. நாள் தோறும் 200 கோடி மதிப்பிலான அரிசி, காய்கறி, முட்டை போன்ற உணவு பொருட்கள் கேரள மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் சப்ளையாகின்றன. லாரிகள் போராட்டம் முன்று நாட்கள் தொடர்ந்தாலே கேரளாவில் உணவு பிரச்சினை ஏற்படும். விலைவாசி உயர்வு 100 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உடனடியாக கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், காலரவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
இதே போன்று புதுவையில் லாரி நிறுத்துவதற்கு வழங்கப்பட்ட இடத்தை வேறு பயன்பாட்டிற்கு வழங்க புதுவை அரசு முடிவு செய்து இருப்பதை கண்டித்து வரும் 17ஆம் தேதி முதல் லாரிகள் புதுவைக்கு இயக்கப்பட மாட்டாது.
அதேபோல் சென்னையில் பகல்நேரங்களில் லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் லாரி ஓட்டுநர்கள் மீது தேவையற்ற பைன், பொய்யான வழக்குப் பதிவு செய்யப்படுவதை கண்டித்து வரும் 30ம் தேதி ஆர்பாட்டம் நடத்தப்படும் என்றும் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications