விடுதலைப்புலிகள் தீவிரவாதிகளா? மெட்ராஸ் கஃபே படத்தை தடை செய்க: சீமான்!
சென்னை: விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள "மெட்ராஸ் கஃபே" படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தி பட இயக்குனர் ஷோதித் ஸ்ரீகர் டைரக் ஷனில் உருவாகியுள்ள படம்"மெட்ராஸ் கஃபே". இந்தப் படத்தினை ஜான் ஆபிரஹாம் தயாரித்துள்ளார் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு முதலில் ஜாஃப்னா என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு மெட்ராஸ் கஃபே என பெயர் மாற்றப்பட்டது.
உளவு அதிகாரியாக ஜான் ஆபிரஹாம்
இந்திய உளவுப்பிரிவின் அதிகாரியாக ஜான் ஆபிரஹாம் நடித்திருக்கிறார். சர்வதேச பத்திரிகையாளராக நர்கீஸ் பக்ரி நடித்துள்ளார்.
விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள் அதே பெயரில், அதே யூனிஃபார்மில் படத்தில் வருகிறார்கள். இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதியும் அங்கு இருப்பதாக காட்சிகள் உள்ளன.
இன அழிப்பு நியாயம்
இன அழிப்பு போரை நியாயப்படுத்தியும், போராளிகளை இழிவு செய்தும் காட்சிகள் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக தமிழீழ ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.
விடுதலைப்புலிகள் தீவிரவாதிகளா?
இந்த படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இன்று காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டமும் நடைபெற்றது.
சர்ச்சை கிளம்பும்?
இதேபோல், மெட்ராஸ் கஃபே படத்துக்கு தடை விதிக்க கோரி தமிழீழ மாணவர்கள் கூட்டமைப்பும் சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளது. ஆகஸ்ட் 23 ல் படம் வெளியாகும் போது கடும் சர்ச்சைகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.