வேலூரில் இந்து முன்னணியின் வெள்ளையப்பன் கொல்லப்பட்ட இடத்தில் சிபிசிஐடி ஆய்வு
இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் வெள்ளையப்பன் கடந்த 1ம் தேதி மர்ம நபர்களால் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் முத்து மண்டபம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை நடந்த இடத்தில் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், செருப்புகள், சிவப்பு நிற சட்டை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் கொலையாளிகள் பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 19ம் தேதி சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்த 2 கொலைகளுக்கும் இடையே ஒரு சில ஒற்றுமைகள் இருந்ததால் சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து வேலூருக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் வேலூர் தனிப்படை போலீசார் நடத்தியுள்ள விசாரணைக் குறிப்புகளை பார்த்தனர். அதன் பிறகு வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் டிஐஜி அலுவலகத்தில் வெள்ளையப்பனுக்கு நெருக்கமான இந்து முன்னணி நிர்வாகிகள் சிலரை வரவழைத்து அவர்களிடம் இருந்து சில தகவல்கள் பெறப்பட்டது.