90 அடியை தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்: ஒகேனக்கல் அருவிகளில் வரலாறு காணாத வெள்ளம்
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 90 அடியை எட்டியுள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு தற்போது 46 ஆயிரத்து 252 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையில் இருந்து நேற்று இரவு முதல் 62 ஆயிரத்து 181 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் கபினி அணைக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் இன்று காலை ஒகேனக்கல்லில் வினாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
90 அடியாக உயர்வு
இதனால் கடந்த சில நாட்களாக மெதுவாக உயர்ந்து வந்த மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப் படி அணையின் நீர்மட்டம் 85.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை நீர்வரத்து அதிகரித்து 52 ஆயிரத்து 701 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நீர் மட்டம் 90 அடியை தாண்டியது.
நேற்று ஒரே நாளில் மட்டும் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. தற்போது கர்நாடக அணைகளில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்னும் சில தினங்களில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ள அபாயம்
காவிரியில் பெருக்கெடுத்து வரும் நீரின் அளவை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொங்கு பாலத்திற்கு சீல்
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் இரு கரையையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று காலை ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மற்றும் சினி பால்ஸ் பகுதியில் இருந்து வாட்ச் டவர் செல்லும் பகுதியில் நடைபாதைக்கு மேல் சுமார் 3 அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஐவர்பாணி, மெயின் அருவியை ஒட்டியுள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் பாறைகள் எதுவும் தெரியாத வண்ணம் வெள்ளம் சீறிப் பாய்ந்தது. மெயின் அருவி, சினி பால்ஸ் பகுதிக்கு செல்லும் பாதைகளில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொங்கும் பாலத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் ஏமாற்றம்
இதனால் அருவியில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு படை எடுத்தனர். ஆனால் அவர்கள் அருவியில் குளிக்க முடியாமலும், பரிசலில் செல்ல முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வெள்ளப் பெருக்கு காரணமாக கர்நாடக மாநிலம் மாறுகொட்டாய் பகுதிக்கும் தமிழக பகுதியான மணல் திட்டு, பூட்டாறு பகுதிகளுக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.