''காப்பாடி.. காப்பாடி...'... ஹாஹாஹாஹாஹா... இந்தக் கூத்தைக் கேளுங்க!
பெங்களூர்: அர்த்த ராத்திரியில் பெங்களூர் போலீஸாருக்கு ஒரு போன் வந்தது. பேசியது இரு பெண்கள்.. காப்பாடி காப்பாடி என்று கன்னடத்தில் கதறினர் அவர்கள். அதாவது காப்பாத்துங்க, காப்பாத்துங்க என்று. அலறியடித்து போலீஸார் ஓடிப் போய்ப் பார்த்து குற்றம்... நடந்தது என்ன என்று விசாரித்தபோது நடந்ததை அறிந்து கடுப்பாகி விட்டனர் போலீஸார்.
அந்த இரு பெண்களையும் தற்போது கைது செய்துள்ளனர். காரணம்.. அவர்கள் இருவரும் விபச்சாரப் பெண்கள். போன இடத்தில் ஏக போகமாக குடித்து விட்டு போதையில் போலீஸாருக்குப் போனைப் போட்டு உளறியுள்ளனர். அதனால்தான் அவர்களை 'காப்பாட'ப் போன போலீஸார் கையில் விலங்கு போட்டு கூட்டிச் சென்றனராம்.
அந்தக் கதையின் பின்னணியைப் படிங்க....

அது.. அதிகாலை 2.15 மணி....
அதிகாலை 2.15 மணி இருக்கும்.. நல்ல கும்மிருட்டு.. பெங்களூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் கிட்டத்தட்ட போலீஸார் லைட்டான உறக்கத்தில் இருந்தனர்.

திடீரென கிணிகிணி...
திடீரென போன் அலறியது.. தூக்கம் கெட்டு டக்கென எழுந்த போலீஸார், போனை எடுத்து... ஏனப்பா.. ஏனாயித்து என்று கேட்டனர். மறுபக்கம் இரு பெண்கள் மாறி மாறிப் பேசினர்.. அவர்கள் சொன்ன ஒரே வார்த்தை காப்பாத்துங்க காப்பாதுங்க என்பதே...

எங்ளைக் கடத்திட்டாங்க
இதையடுத்து தூக்கம் கலைந்த போலீஸார் என்ன நடந்தது யார் நீங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அப்பெண்கள், எங்களை சிலர் கடத்தி விட்டனர். யஷ்வந்த்பூரில் உள்ள ஒரு லாட்ஜில் அடைத்து வைத்துள்ளனர் என்றனர்.

அலர்ட் போலீஸ்...
அப்போது கன்ட்ரோல் ரூமில் பணியில் இருந்த ஒரு பெண் காவலர் உடனே யஷ்வந்த்பூர் காவல் நிலையத்துக்குப் போனைப் போட்டு இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது. உடனே நைட் டியூட்டி போலீஸாரை அலர்ட் செய்யுங்கள் என்று தகவல் கொடுத்தார். மேலும் ஹோய்சலா பட்ரோல் போலீஸாருக்கும் தகவல் பறந்தது.

அடித்துப் பிடித்துத் தேடிய புனீத் குமார்
இன்ஸ்பெக்டர் புனீத் குமார் என்பவர் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினார். ஒவ்வொரு லாட்ஜாக ஏறி இறங்கினார். போலீஸ் படையும் கூடவே போனது.

இங்கயா.. இங்கயா...
அத்தோடு நில்லாமல் ஒவ்வொரு லாட்ஜ் முன்பும் போய் நின்று ஜீப்பில் ஹார்ன் அடித்தபடியும், அந்தப் பெண்களுக்கு போன் செய்தபடியும், இந்த லாட்ஜா, இந்த லாட்ஜா என்றும் போலீஸார் கேட்டனர். ஆனால் மறுபக்கத்திலிருந்து பதிலே வரவில்லை.

இத்தோடு 10 லாட்ஜ் ஆச்சு குரு...!
இப்படியாக 10 லாட்ஜ் வரை நடையாய் நடந்து விட்டனர் போலீஸார். இந்தநிலையில் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரையும் சிலர் எழுப்பி கிளப்பி விட்டனர். அவர்களும் ஜீப்பை எடுத்துக் கொண்டு பறந்து வந்தனர். செல்போன் டவரை வைத்து அந்த போன் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிந்தனர். அதில் கட்டி சுப்பிரமணியா கோவில் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டிலிருந்து போன் வந்தது தெரிய வந்தது.

இப்ப மணி 3.45...
அப்போது மணி 3.45. தொட்டபெல்லபூர் ஊரக போலீஸாரும் ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தனர். அப்போது மணி 4.30.... ரிசார்ட்டை வந்தடைந்த போலீஸார் அங்கும் போய் ஜீப்பிலிருந்தபடி ஹார்ன் அடித்தனர்.. ஆனால் சத்தம் கேட்டு ரிசார்ட் ஊழியர்கள்தான் வந்தனர்.

ரூம் ரூமாக தேடுதல்
இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் ரூம் ரூமாகவும் போய்த் தேடினர். அப்போது ஒரு ரூமில் குடித்து விட்டு நல்ல போதையில் இரண்டு பெண்கள் விழுந்து கிடந்ததைப் பார்த்தனர்.

இவுரே.. இவுரே....
அவர்களிடமிருந்த செல்போனை எடுத்து பரிசோதித்தபோது அவர்கள் வைத்திருந்த ஒரு போனிலிருந்துதான் அழைப்பு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இரு பெண்களையும் தட்டி எழுப்பினர்.

நாங்கதான் பண்ணோம்....!
விழித்தெழுந்த இரு பெண்களும் தாங்கள்தான் போன் செய்ததாக கூறினர். தங்களை இரண்டு பேர் கடத்தி வந்து விட்டதாகவும், அடைத்து வைத்திருப்பதாகவும் கூறினர். போலீஸ் சத்தம் கேட்டதும் அவர்கள் ஓடி விட்டதாகவும் கூறினர்.

சுள்ளு ஹேளுதாரே.....!
இதையடுத்து ரிசார்ட் ஊழியர்களிடம் விசாரித்தபோது இவர்கள் சொல்வது சுத்தப் பொய். இவர்களை அழைத்து வந்தவர்கள் இரு ஆண்கள். அவர்கள் பக்கத்து ரூமிலி்தான் படுத்துக் கிடக்கின்றனர். என்று அவர்கள் போட்டுக் கொடுத்து விட்டனர்.

என்ன ராசா நடந்துச்சு...?
இதையடுத்து பக்கத்து ரூமுக்குப் போய் அங்கு தூங்கிக் கொண்டிருந்த இரு இளைஞர்களை எழுப்பிய போலீஸார்.. என்னப்பா நடந்தது என்று பரிதாபமாகக் கேட்டனர்.

செம போதை... ஓவர் கத்தல்
அதற்கு அவர்கள், நாங்கள்தான் அப்பெண்களை அழைத்து வந்தோம். பணம் கொடுத்து உல்லாசமாக இருப்பதற்காக கூட்டி வந்தோம். வந்த இடத்தில் அதிக மது அருந்தி விட்டு இருவரும் சத்தம் போட ஆரம்பித்தனர். அதைத் தாங்க முடியாமல்தான் நாங்கள் இங்கு வந்து படுத்து விட்டோம் என்றனர்.

அவங்களா நீங்க....!!
காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று தங்களை எழுப்பி பதறியடிக்க வைத்த இரு பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் என்று தெரிய வந்ததும் கடுப்பாகி விட்டனர் போலீஸார்.

நடங்கம்மா டேசனுக்கு....!
அதன் பின்னர் இரு பெண்களையும், அவர்களுடன் உல்லாசமாக இருக்க வந்த இரு இளைஞர்களையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அவர்கள் மீது விபச்சாரத் தடுப்புப் பிரிவின் கீழ் தற்போது வழக்குப் போட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications