இந்த கூட்டத் தொடரிலாவது மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுங்கள்: கருணாநிதி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கடந்த 16 ஆண்டுகளாக தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுவதும், பிறகு ஏதோ ஒரு காரணத்தால் அது நிறைவேறாமல் போவதும் வழக்கமாக இருந்து வருகிறது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது பேசப்பட்டாலும் 1996-ஆம் ஆண்டு தேவ கௌடா பிரதமராக இருந்தபோதுதான் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. ஆனால், முலாயம் சிங் மற்றும் லல்லு பிரசாத் ஆகியோரின் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. மீண்டும் இந்த மசோதா 26-6-1998-ல் மக்களவையில் முன்மொழியப்பட்டு, எதிர்க்கட்சிகளின் அமளியால் நிறைவேறவில்லை.
22-11-1999-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டபோது, மசோதாவின் நகலைப் பறித்து கிழித்தெறிந்தனர். பிறகு 2002, 2003, 2008-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் சில கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்ற முடியவில்லை.
கடந்த 8-3-2010-ல் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா கூச்சல், குழப்பத்துக்கு இடையில் மறுநாள் நிறைவேறியது. ஆனால், மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலாவது அனைவரின் ஒத்துழைப்போடு மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.