ஆந்திரா பிரிவினை: அதிர்ச்சியில் 7 பேர் மரணம்: 10 பேர் தற்கொலை முயற்சி
ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இந்த நிலையில் விஜயவாடா, அஜீத் சிங் நகரில் ஒரு மாணவியின் உருக்கமான பேச்சை கேட்டு குருசாமி என்பவர் அதிர்ச்சியில் உயிர் இழந்தார்.
அனந்தபூர் சாதிபத்ரி என்ற ஊரில் சுப்பிரமணியம் என்பவரும் கிருஷ்ணா மாவட்டம் மல்லவள்ளி என்ற ஊரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பத்மநாபன் என்பவரும் டி.வி. செய்தியை பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.
இதே போல் குண்டூர் மாவட்டத்தில் சிவாஜி என்பவரும், விஜயநகர மாவட்டத்தில் அரிபாபு என்பவரும் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை டி.வி.யில் பார்த்து அதிர்ச்சி அடைந்து பலியானார்கள்.
மாரடைப்பு, தற்கொலை
விஜய நகரம் தாதில் பூடியில் ஊர்க்காவல் படை வீரர் சீனிவாசராவ் என்பவர் தெலுங்கு பேசும் மக்களை பிரித்து விட்டார்களே என வேதனை அடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குண்டூரில் மின்வாரிய ஊழியர் சேக் காஜா அலி அரசியல் தலைவர்களின் காலை பிடித்து கதறி அழுததை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாரடைப்பில் உயிர் இழந்தார்.
10 பேர் கவலைக்கிடம்
இது தவிர பல்வேறு இடங்களில் 10 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். கிழக்கு கோதாவரியில் பாப்ஜி என்ற வாலிபர் செல்போன் டவரில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் முறிந்தது. தற்கொலை முயற்சி செய்த 10 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.