மேட்டூர் அணையில் இருந்து நாளைமுதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு: ஜெ.
கொடநாடு: சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களின் பாசனத்திற்காக நாளை முதல் மேட்டூர் அணையில் இருந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயல்லிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்காக 2.8.2013 முதல் தண்ணீர் திறந்து விடும்படி, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக 2.8.2013 முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் நிலங்களும், சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர் நிலங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்.