தெலுங்கானா.. 7 எம்.பிக்கள் ராஜினாமா! 4 மத்திய அமைச்சர்களும் விலகப் போவதாக மிரட்டல்!
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் 4 மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது என்று காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்துள்ளது. ஆனால் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினரே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக தெலுங்கானா தவிர்த்த எஞ்சிய ஆந்திர பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.
தொடர்ந்தும் முழு அடைப்புப் போராட்டமும் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 6 லோக்சபா, ஒரு ராஜ்யசபா எம்.பி ஆகியோர் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன் மத்திய அமைச்சர்களான பல்லம் ராஜூ, புரந்தேஸ்வரி, ஜேடி சீலம் மற்றும் கில்லி குருபராணி ஆகியோரும் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்லனர்.
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு 33 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 19 பேர் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் மத்திய அமைச்சர்கள், எம்.பிக்களின் பதவி விலகல் அக்கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.