பூரண மதுவிலக்குக்கான மாணவர் போராட்டம்- சீமான், மனித நேய மக்கள் கட்சி ஆதரவு
இது குறித்து நாம் தமிழர் சீமான வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும், முழுமையான மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரி மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி உள்ளிட்ட மாணவர்களும், அவர்களோடு காந்தியவாதி சசி பெருமாள் ஆகியோரும் நடத்தும் பட்டிணி போராட்டத்தை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கிறது.
நமது நாடு விடுதலை பெற்று கால் நூற்றாண்டுக் காலம் கடந்த நிலையிலும் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. புதுச்சேரி உட்பட தமிழ்நாட்டை சுற்றியிருக்கும் மாநிலங்களில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டிருந்த நிலையிலும் தமிழ்நாடு மதுவிலக்குக் கொள்கையை உறுதியாக கடைபிடித்தது.
அதன் விளைவே, கல்வியிலும், தொழிலிலும், தொழிலக, விவசாய உற்பத்தியிலும், சேமிப்பிலும், சமூக அமைதியிலும் தமிழ்நாடு மிகச் சிறந்த மாநிலமாக திகழ்ந்தது. அறிவாளிகளையும், தலைவர்களையும் உருவாக்கும் மாநிலமாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. இந்தியாவின் வேறெந்த மாநிலத்தையும் விட கல்வி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் பெரும் ஏற்றத்தை கண்ட மாநிலமாக பெருமையுற்ற நிலையில் இருந்தது தமிழ்நாடு.
ஆனால் பெருந்தலைவர் காமராஜர் மறைவி;ற்குப் பிறகு மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. முதலில் எதிர்த்த எம்.ஜி.ஆரும் பிறகு மதுவிலக்குக் கொள்கையை கைவிட்டார். இதன் விளைவு, கடந்த 40 ஆண்டுகளில் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி மூன்று தலைமுறை கெட்டுவிட்டது. அன்றைக்கு வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே இருந்த குடிபழக்கம் இன்று இளைஞர்கள், மாணவர்கள் வரை பழகிவிட்டது.
இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாணவி நந்தினியும், அவரோடு பல மாணவ தோழர்களும், காந்தியவாதி சசி பெருமாளும் பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திலுள்ள நியாயத்தை உணர்ந்து மதுவிலக்குக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்திடும் ஒரு முடிவை, தமிழக அரசு அறிவித்திட வேண்டும் என்று நாம் தமிழர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல சட்டக்கல்லூரி மாணவி நந்தினியை, மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்.