வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே, போராளியாகவே இருப்பேன்- வைகோ
சென்னை: இஸ்லாம் மார்க்கம் சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுகிறது. எதற்கும் அஞ்சாதே தொடர்ந்து போராடு என்று இஸ்லாம் சொல்கிறது. அதுபோல நான் என் வாழ்நாள் முழுவதையும் போராடிக்கொண்டே இருக்கிறேன். தொடர்ந்து நேர்மை, நாணயம், ஒழுக்கம் சற்றும் குறையாமல் மனிதநேயமிக்க மனிதனாக கடைசிவரை போராளியாகவே இருப்பேன் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
மதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை மண்ணடியில் உள்ள அன்னை ஆயிஷா மஹாலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் அமைப்பு செயலாளர் கவுன்சிலர் சீமா பஷீர் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், எஸ்.ஹதர் அலி, எம்.பஷீர் அஹமது, மல்லை சத்யா, இமயம் ஜெபராஜ், டாக்டர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், ஜி.தேவதாஸ், சு.ஜீவன், வேளச்சேரி பி.மணிமாறன், பாலவாக்கம் க.சோமு, டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் மற்றும் மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி மற்றும் கழக நிர்வாகிகள், முன்னணியினரும், தோழர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், இஸ்லாம் மார்க்கம் சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுகிறது. எதற்கும் அஞ்சாதே தொடர்ந்து போராடு என்று இஸ்லாம் சொல்கிறது. அதுபோல நான் என் வாழ்நாள் முழுவதையும் போராடிக்கொண்டே இருக்கிறேன். தொடர்ந்து நேர்மை, நாணயம், ஒழுக்கம் சற்றும் குறையாமல் மனிதநேயமிக்க மனிதனாக கடைசிவரை போராளியாகவே இருப்பேன்.
தற்போது மனிதர்களிடையே மனிதநேயம் பட்டுப்போய் இருக்கிறது. அதற்கு நம்மை சுற்றிக்கொண்டிருக்கும் மது எனும் கொடிய நெருப்பு தான் காரணம். நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவில் கற்பழிப்புகள், கொலைகள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து குற்றங்களுக்கும் பின்னணியில் மது எனும் அரக்கன் இருக்கிறது. மிருகத்தைவிட கொடுமையானது மது. அதை ஒழிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன்.
பொதுவாழ்வில் இருப்பவர்கள் தூய்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். தன்னலம் உடையவர்களாக இருக்கக்கூடாது. அரசியல் சூழ்நிலையில் சில நேரங்களில் எங்களுடைய நிலைப்பாடுகளில் மாற்றம் இருந்தாலும், எங்களுடைய அடிப்படை கருத்தில் இருந்து பின்வாங்கியது கிடையாது.
மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றபோது, அக்கட்சியில் ம.தி.மு.க. கூட்டணியில் இருந்தது. எனினும் மத்தியில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவை நாங்கள் எதிர்த்தோம். சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்காக போராடுவதாக காட்டிக்கொள்ளும் கட்சிகள் ஒன்றுமே செய்யவில்லை என்றார் அவர்.