மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதோடு நின்று விடுவது சரியல்ல... கருணாநிதி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்துள்ளது. எப்போதோ ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வந்த சம்பவம், தற்போது இரண்டொரு நாட்களுக்கிடையே அரங் கேறும் கொடுமையாக மாறி விட்டது.
தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், விசைப்படகுகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மீன் பிடிப்பதில் ஈடுபடுகின்றன. ராமேஸ்வரம், நாகப்பட்டினம், மண்டபம்,கோடியக்கரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகச் சாக்கு சொல்லி இலங்கைக் கடற்படையினர் அவர்களை வேண்டுமென்றே கைது செய்து சிறையிலே அடைக்கிறார்கள்.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் பத்து முறை இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கைக்கும், நாகைக்கும் இடையே சர்வதேசக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 65பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப் பட்டார்கள்.
அதன் பிறகு கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 74 மீனவர்களை, பத்துக்கும் மேற்பட்ட படகுகளுடன் இலங்கைக் கடற்படை சிறை பிடித்து, அவர்களை திரிகோணமலை கடற்படைப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். ஏற்கனவே கைதாகி அனுராதபுரம் சிறையிலே 21 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த வரிசையில் தான் 3-8-2013 அன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்கள். எனவே தமிழக மீனவர்களின் இந்தத் தொடர்ந்து வரும் துயரம் குறித்து மத்திய அரசும், மாநில அரசும் வெறும் கடித பரிமாற்றத்தை மட்டும் செய்து கொண்டிராமல் பயனுள்ள முறையில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவிற்கு விரைவில் முடிவெடுத்துச் செய்தாலொழிய, நம்முடைய மீனவர்களின் துன்பங்கள் குறையப் போவதில்லை.
இந்தப் பிரச்சினை வெளி நாட்டுப்பிரச்சினை என்பதால் தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகள் மத்திய, மாநில அரசுகளிடம் முறையிடவும், இலங்கைக் கடற்படையினரின் மனிதாபிமானமற்ற போக்கைக் கண்டித்திடவும்தான் முடிகிறதே தவிர, வேறு எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம்.
எனவே மாநில அரசு ஒவ்வொரு முறை நமது மீனவர்கள் கைது செய்யப்படும் போது, பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும், மத்தியஅரசு உடனடியாக இலங்கைத் தூதுவருக்கோ, இலங்கை அரசுக்கோ கடிதம் எழுது வதும், அத்துடன் காரியம் முடிந்து விட்டதாகக் கருதுவதும் சரியல்ல.
மத்திய அமைச்சரிடம் முறையிட்ட மீனவர்கள், தாங்கள் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியக் கடல் பகுதியிலேயே மீன் பிடித்து வந்ததாகவும், அதனால் அந்தப் பகுதிகளில் மீன் வளம் குறைந்து விட்டதாகவும், பெரும் நட்டம் ஏற்பட்டு குடும்பம் நடத்த முடியாத நிலை இருப்பதாகவும், மீன்கள் அதிகம் இருக்கும் பகுதி நோக்கிச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்குள்ளாக வேண்டியுள்ளது என்றும், எனவே இலங்கைப் பகுதியில் குறிப்பிட்ட மாதங்களில் மீன் பிடிக்க உரிமை பெற்றுத் தரவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்கள்.
இந்தக் கோரிக்கைகளை அப்படியே அலட்சியப்படுத்திவிடாமல் மத்திய, மாநில அரசுகள் அக்கறையோடு ஆழ்ந்து பரிசீலித்து எந்த முறையிலே மீனவர்களின் துயரத்தைக் களையலாம் என்பதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.