நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.. எதிர்கட்சிகள் அமளி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது முன்னதாக ராஜ்யசபா உறுப்பினராக திமுகவின் கனிமொழி 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த கூட்டத்தொடரில் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட 40க்கும் அதிகமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இருப்பினும் தெலங்கானா தனி மாநில விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 12 வேலைநாட்கள் மட்டுமே இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் இருப்பதால் நிதித்துறை சார்ந்த மசோதாக்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பாரதிய ஜனதா தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க தயார் என அறிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங், கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 30ஆம் தேதி நிறைவடைகிறது. தேவைப்பட்டால் கூட்டத்தொடரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
இன்று நாடாளுமன்றம் தொடங்கிய உடனேயே இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபா கூச்சலுக்கிடையே நடைபெற்று வருகிறது.