ரூ.100 கோடி பிளாட் பிரச்சனையால் இந்தியா-குவைத் உறவு பாதிக்கும் அபாயம்
குவைத் அரச குடும்பத்திற்கு மும்பை மரைன் டிரைவ் பகுதியில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அல் சபா என்று பெயர் கொண்ட அந்த கட்டிடத்தில் 5வது மாடியில் உள்ள 7,000 சதுர அடியில் ரூ.100 கோடி மதிப்புள்ள பிளாட் குறித்து பிரச்சனை
எழுந்துள்ளது. இந்த கட்டிடத்தை இந்தியாவுக்கான குவைத் கன்சல் ஜெனரல் பைசல் எஸ்ஸா(83) கவனித்து வருகிறார்.
இந்நிலையில் பைசல் கூறுகையில்,
அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் பில்டரும், சினிமா தயாரிப்பாளருமான சஞ்சய் புனமியா 5வது மாடியில் உள்ள பிளாட்டுக்கு ரூ.16,666 மாத வாடகை என்று போலி ஆவணங்கள் தயாரித்துள்ளார். மேலும் பிளாட்டில் இருந்த அரேபிய நாட்டு பொருட்கள், கார்பெட்டுகள் என்று ரூ.30 கோடி மதிப்புள்ள பொருட்களை சஞ்சய் திருடிவிட்டார் என்றார்.
இந்த விவகாரத்தில் மரைன் டிரைவ் போலீசாரும் சஞ்சயுடன் சேர்ந்து செயல்படுவதாக அரச குடும்பம் குற்றம்சாட்டியுள்ளது. பைசலுக்கு சிறப்பு பாஸ்போர்ட்டும், தூதரக பாதுகாப்பும் இருந்தாலும் அவர் சஞ்சயிடம் துப்பாக்கியை காட்டியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிளாட் குறித்து தான் அளித்த புகாரை இது சிவில் விவகாரம் என்று கூறி போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை என்று பைசல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி இந்தியாவுக்கான குவைத் தூதர் முகமது அல் சுலைமானுக்கு அரச குடும்பத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது.
அதில் மறைந்த குவைத் அமிர் ஷேக் அல் சாத் அல் சபாவின் மகள் ஷெய்க்கா பாத்யா சாத் அல் சபா கூறியிருப்பதாவது, மும்பை போலீசாரின் நடவடிக்கை அதிருப்தியை அளிப்பதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரச குடும்பம் தெரிவித்துள்ளது. இதில் குளறுபடி நடந்தால் கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்களில் பாதிப்பு ஏற்படும் என்று அரச குடும்பம் எச்சரித்துள்ளது.