உ.பி.மசூதி சுவரை இடித்தது மணல் மாஃபியா கோஷ்டிதான்.. ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லை: வக்பு உறுப்பினர்
லக்னோ: நொய்டாவில் மசூதி சுவரை இடித்தது இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி அல்ல.. உள்ளூர் மணல் மாஃபியாக்கள்தான் சுவரை இடித்தனர் என்று அம்மாநில வக்பு வாரிய உறுப்பினர் காதிர் கான் ஜயஸ்வால் தெரிவித்துள்ளார்.
மசூதி சுவரை இடிக்க உத்தரவிட்டு சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கப் பார்த்தார்ல் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி. இதனால் அவர் சஸ்பென்ட் செய்யப்படுகிறார் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனாலும் உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி அரசோ தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த வக்பு வாரிய உறுப்பினர் காதிர் கான், மசூதியின் சுவரை இடிக்க உத்தரவிட்டது துர்கா சக்தி அல்ல. அவர் சம்பவ இடத்தில் இருந்து கிளம்பிச் சென்ற பின்னர் உள்ளூர் மணல் மாஃபியா கும்பல்தான் அந்த சுவரை இடித்தது.
ஜூலை 27-ந் தேதியன்று உரிய அனுமதி இல்லாமல் மசூதி கட்டப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்தே சம்பவ இடத்துக்கு துர்கா சக்தி சென்றார். உள்ளூர் மணல் மாஃபியா, வக்பு வாரியத்துக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அவர்கள் அனைவருமே சமாஜ்வாடி கட்சியின் ஆதரவாளர்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தியை பலிகடாவாக்கிவிட்டனர் என்றார்.
ஆனால் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவோ இதை நிராகரித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்திதான் தவறு செய்தார் என்று கூறி வருகிறார்.