முல்லைப் பெரியாறு அணை வழக்கு.. கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் முன்பு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரும் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திட உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறுவதற்காக கேரள சட்டசபையில் அணைகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்து தமிழ அரசு சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது. தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட இந்த வாதம் ஏற்கத்தக்கது எனக் கூறிய நீதிபதிகள், அணையின் பாதுகாப்பை கேரள சட்டசபை தீர்மானம் மூலம் முடிவு செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தது.
இன்று கேரள அரசு தனது தரப்பு வாதத்தை நீதிபதிகள் முன்பு எடுத்து வைத்தது.
அப்போது அணையின் பாதுகாப்பு கருதி அணையில் 136 அடிக்கு மட்டும் நீர் நிரப்ப வேண்டும் என்று கேரள அரசின் வாதம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீர் நிரப்பினால் அணைக்கு ஆபத்து என்றால் அப்போது 136 அடிக்கு மட்டும் நீர் நிரப்பினால் அணை பாதுகாப்பாக இருக்கும் என்று எவ்வாறு உங்களால் கூற முடியும் என்று கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் உச்சநீதிமன்றம் இன்னொரு வல்லுநர் குழுவை நியமித்து அணையை ஆய்வு செய்து அப்போது பாதுகாப்பாக இல்லை எனில் அணையை இடிக்க கேரளாவுக்கு உரிமை உண்டு என்றும் கேரள வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது உச்சநீதிமன்றம் அமைத்த முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவின் அறிக்கையையும் கேரள அரசு வழக்கறிஞர் விமர்சித்தார்.
இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணையைவிட உயரமான அணைகள் பலமாக இருக்கின்றன. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை எப்படி பாதுகாப்பானதாக இல்லை என்று கூற முடியும் என்றனர்.