லோக்சபா தேர்தலில் வைகோ போட்டியிடுவாரா? பொதுக்குழு முடிவெடுக்குமாம்!
சென்னை: லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டுயிடுவது பற்றி பொதுக்குழுவில் பேசி முடிவெடுக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ம.தி.மு.க.வின் மாநில மாநாடு செப்டம்பர் 15 ஆம் தேதி விருதுநகரில் நடக்கிறது. மாநாட்டுக்காக, விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் ரோட்டில் சூலக்கரை அருகே 25 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதில் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

காமராஜர் பிறந்த பூமியில் அண்ணா பிறந்த நாள் விழா மாநில மாநாடு வருகிற செப்-15ம் தேதி நடைபெற இருக்கிறது.இம்மாநாட்டில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதிமுகவினர் லட்சக்கணக்கானோர் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த மாநாடு கழக உயர்நிலைக் குழு உறுப்பினரான ஜெபராஜ் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் கவனித்து வருகிறார். இதற்கான பணிகளை கடந்த 1-ம் தேதியே தொடங்க இருந்த நிலையில், மாநாட்டிற்கான அனுமதி கடந்த 3-ம் தேதிதான் மாவட்ட காவல் துறை வழங்கியது.
மேலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமலும், நெரிசலை ஏற்படுத்தாத வகையிலும் 4 வழிச்சாலையில் இருந்து 1000 அடி தள்ளியே மாநாட்டிற்கு பந்தல் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மதிமுகவின் வெற்றிக்கும், அதிமுக-திமுகவிற்கும் மாற்று அரசியலுக்கான நுழைவு வாயிலாக இம்மாநாடு அமையும். மேலும், இதில் அனைத்து மக்களின் வாழ்வாதரங்களை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சூழல், முல்லைப்பெரியாறு, நதிகளை இணைக்கவும், நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. மேலும், இந்த மாநாடு ம.தி.மு.க.வுக்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்தும். விருதுநகர் தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிடும். நான் போட்டியிடுவது தொடர்பாக கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள் விருதுநகர்-ஆர்.எம்.சண்முகசுந்தரம், சிவகங்கை- புலவர் செவந்தியப்பன், மதுரை மாநகர் -புதூர் பூமிநாதன், திண்டுக்கல் -செல்வராகவன், நெல்லை புறநகர் - ப.ஆ.சரவணன், நெல்லை மாநகர் - எஸ். பெருமாள் மற்றும் எம்.டி. சின்னசெல்லம், மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், மாநில தொண்டர் அணிச் செயலாளர் பாஸ்கரசேதுபதி, இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்ட ஏராளமானோ கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications