கழகமே குடும்பம் என்றிருந்த நிலைமை மாறி குடும்பமே கழகம்
மேலும் தனது அறிக்கையில், எதற்கெடுத்தாலும் நான் அவரது குடும்பத்தைப் பற்றி பேசுவதாக கருணாநிதி கூறி இருக்கிறார். இவருடைய குடும்பத்தில், மகன்கள், மகள், பேரன் என எல்லோருமே அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். "கழகமே குடும்பம்" என்றிருந்த நிலைமை மாறி "குடும்பமே கழகம்" என்று ஆகிவிட்ட நிலையில் குடும்பத்தைப் பற்றி பேசாமல் எப்படி இருப்பது?
கருணாநிதியின் பதில் அறிக்கையில் கூட, தமிழக மக்களுக்கு பாதகமான, துரோகம் விளைவிக்கக் கூடிய தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை தி.மு.க. எதிர்க்கும் என்ற வாசகங்கள் இடம்பெறவில்லை.
மேலும், 10.8.2013 அன்று பத்திரிகைகளில் வெளிவந்துள்ள கருணாநிதியின் அறிக்கையில், "இந்த மசோதா காரணமாக தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் பொது விநியோகத் திட்டத்திற்கு எந்த வகையிலும் ஊனம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும்; யாருக்கும் பாதிப்பு கூடாது என்பதிலும்; மாநில உரிமைகள் பறிபோய் விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறது. அதே நேரத்தில், இந்த மசோதாவின் காரணமாக கிடைக்கக்கூடிய பயன்களையும் இழந்துவிடக் கூடாது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக எதிர்த்திடாமல், அப்படியே ஆதரித்தும் விடாமல் அவசர அவசியமான திருத்தங்களுடன் மாநிலங்களில் உள்ள நடைமுறைக்கு ஏற்பக் கொண்டு வர மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே இருக்கின்ற மாநில உரிமைகளுக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படாமல், இந்த உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே திராவிட முன்னேற்றக் கழகம் அதனை ஆதரிக்கும்!" என்று கூறியிருப்பது "பாம்புக்கு தலையும், மீனுக்கு வாலையும் காட்டுவது" என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
கருணாநிதியின் இந்த அறிக்கையால் என்ன பயன் விளையப் போகிறது? இந்தத் தருணத்தில் பின்வரும் வினாக்களுக்கு கருணாநிதி பதில் அளிக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.