பாஜகவில் சுப்பிரமணிய சாமி: ஜனதா கட்சியையும் இணைத்தார்!!
டெல்லியில் ராஜ்நாத் சிங் வீட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுடன் சுப்பிரமணிய சாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கட்சியில் சுப்பிரமணிய சாமி இணைவதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் முன்னிலையில், இந்த அறிவிப்பை சுப்பிரமணிய சாமி வெளியிட்டார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணிய சாமி, பாரதிய ஜனதா கட்சியும், ஜனதா கட்சியும் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அவரது கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன். சுப்பிரமணிய சாமி அவரது கட்சியும் பாரதிய ஜனதாவில் இணைந்திருப்பது பலனளிக்கும் என்று நம்புகிறேன். அவரை வரவேற்கிறேன் என்றார்.
2014ம் ஆண்டு லோக்சபா பொதுத் தேர்தலை பாஜக தலைமையில் சந்திப்போம் என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.
பாஜகவில் இணைவதற்கு முன்பே கூட அவர் அந்தக் கட்சியுடன் இணைந்தே செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.