குற்ற வழக்கில் சிக்கிய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு: மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல்
டெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கும் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி, உடனடியாக தானாகவே பறிபோய்விடும் என்று கடந்த ஜூலை 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
சிறையிலோ, போலீஸ் கட்டுப்பாட்டிலோ இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.குற்ற நிரூபணத்துக்கு மேல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தால், சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி, தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டப்பிரிவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த தீர்ப்புக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், கூறப்பட்டுள்ளதாவது:
"இதுபோன்ற அரசியல் சட்ட விவகாரங்களை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது தவறு. அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வுதான் விசாரிக்க வேண்டும். எனவே, இந்த மனுவை அரசியல் சட்ட அமர்வுக்கு அனுப்ப வேண்டும். இம்மனு மீது தீர்வு காணும்வரை, ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த தீர்ப்பு, அரசியல் ரீதியாக பழிவாங்கவே பயன்படும். மேலும், அப்பீல் மனுக்களில் எத்தனையோ பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, அப்பீல் மனு நிலுவையில் இருக்கும்போதே பதவியை பறித்துவிட்டால், அப்பீல் மனுவில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், அவரால் மறுபடியும் பதவியை பெற முடியாது. இது அவருக்கு இழைக்கப்படும் அநீதி.
ஒருவர் எப்போது பதவி பறிப்புக்கு ஆளாவார் என்று சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் உள்ளது. அதன் அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக் கொள்ளக்கூடாது.மேலும், இந்த தீர்ப்பு அரசு நிர்வாகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications