தொடரும் கூர்க்காலாந்து முழக்கம்! அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பு!! 400 பேர் கைது!!
டார்ஜிலிங்: கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங் மலை பிரதேசத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. அடுத்த 15 நாட்களுக்கான போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 400 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனித் தெலுங்கானா உருவாக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து டார்ஜிலிங் மலைபிரதேசத்தை பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி போராட்டங்கள் வெடித்தன. ஆனால் ஒருபோதும் தனி மாநில கோரிக்கையை ஏற்க முடியாது என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்து போராட்டத்தைக் கைவிட கெடுவும் நிர்ணயித்தார்.
இருப்பினும் மமதாவின் கெடுவை மீறி போராட்டம் தொடர்ந்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக கூர்க்காலாந்து கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. நாளை முதல் 23-ந் தேதி வரை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் போராட்டத்தை நடத்தப்படும் என்றும் மரம் மற்றும் தேயிலை ஆகியவற்றை டார்ஜிலிங் மலையில் இருந்து எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டப் பகுதியில் ஆங்காங்கே பேரணிகளும் நடைபெறும் என்றும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வர்த்தக நிறுவனங்களை மூடிவிட வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் உலகம் முழுவது இருக்கும் கூர்க்கா இனத்தவர் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஃபேக்ஸ் அனுப்பும் போராட்டம் நடத்துகின்றனர்.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29-ந் தேதி கூட்டு நடவடிக்கைக் குழு கூடி புதிய போராட்டம் பற்றி விவாதிக்க இருக்கிறது.