செங்கல்பட்டு பள்ளிகளுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்... 10 பள்ளிகளில் பரபரப்பு
இன்று காலை சென்னை காவல்துறைக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், செங்கல்பட்டு டவுனில் உள்ள 10 பள்ளிகளில் குண்டு வைக்கப்பட்டுள்ளது. அது எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறலாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. விஜயக்குமாருக்குத் தகவல் போனது. அவர் போலீஸாரை உஷார்படுத்தினார். போலீஸ் படைகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் நிபுணர்களுடன் விரைந்தனர்.
பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 10 பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
மாணவ, மாணவியர்களை வெளியேற்றி விட்டு ஒவ்வொரு வகுப்பறையாக சோதனை போட்டனர். எந்தப் பொருளையும் விடாமல் சோதித்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அது புரளி என்பது உறுதியானது.
இந்தப் புரளி காரணமாக 10 பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. வெடிகுண்டு புரளி காரணமாக பெரும் பரபரப்புடன் காணப்பட்டது செங்கல்பட்டு.