5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - சீனா கூட்டு ராணுவ பயிற்சி
டெல்லி: ஜம்மு காஷ்மீர், அருணாசலப் பிரதேசங்களில் ஊடுருவல் நடவடிக்கையை சீனா மேற்கொண்டு வரும் நிலையில் இந்திய-சீன ராணுவ வீரர்களின் கூட்டு ராணுவ பயிற்சி நவம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்ன் லடாக் பகுதியில் சீனா அடிக்கடி ஊடுருவி வருகிறது. இதேபோல் அருணாசலப்பிரதேசத்தில் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு சீன ராணுவத்தினர் ஊடுருவி அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி வரும் நவம்பர் மாதம் 4-ந் தேதியில் இருந்து 14-ந் தேதி வரை சீனாவில் உள்ள செங்டு பிரதேசத்தில் நடைபெறுகிறது.
இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு சீனாவிலும் தொடர்ந்து 2008-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெல்லாரியிலும் இருநாட்டு ராணுவ வீரர்கள் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.
2010-ம் ஆண்டு இந்திய ராணுவ (வடக்கு) கமாண்டர், லெப்டிணன்ட் ஜெனரல் பி.எஸ். ஜஸ்வாலுக்கு விசா வழங்க சீனா மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து, சீனாவுடனான கூட்டுப் பயிற்சிக்கு இந்திய அரசு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.