இளவரசன் மர்ம மரணம்: தடவியல் நிபுணர் சந்திரசேகரை சேர்க்க ஹைகோர்ட் மறுப்பு
சென்னை: இளவரசன் மரணம் குறித்த விசாரணை கமிஷனில், தடயவியல் நிபுணர் சந்திரசேகரை சேர்க்க அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தர்மபுரியில், காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன் மர்மமான முறையில் மரணமடைந்தார். அதற்காக தமிழக அரசு நீதிபதி சிங்காரவேல் தலைமையில் விசாரணைக் கமிஷனை அமைத்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ‘‘காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன், கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். ரயில்வே தண்டவாளம் அருகே அவர் சடலமாகக் கிடந்தார். இளரவசன் மரணம் குறித்து, அரசு நியமித்த நீதிபதி சிங்காரவேல் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை கமிஷனில் தடயவியல் நிபுணர் சந்திரசேகரையும் சேர்க்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் தனபாலன், செல்வம் ஆகியோர் முன்னிலையில இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின் இன்று அவர்கள் வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது:
''இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் தடயவியல் நிபுணர் சந்திரசேகரையும் நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது.
தேவைப்பட்டால் அரசு, அந்த விசாரணை கமிஷனில் தடயவியல் நிபுணர் சந்திரசேகரை நியமித்துக் கொள்ளலாம்" என்று நீதிபதிகள் கூறியதோடு, அந்த வழக்கை இத்துடன் முடித்து வைத்தனர்.