ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு நல்ல செய்தி!: கருணாநிதி

செய்தியாளர்களின் கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில்கள்:
கேள்வி: தமிழக மீனவர்கள் 35 பேர் மீண்டும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே?
கருணாநிதி: தமிழக மீனவர்கள் பிரச்னை பற்றி தொடர்ந்து நான் எழுதிக் கொண்டே வருகிறேன். மேலும் இலங்கை கடற்படையினரின் வெறியாட்டம் தாங்க முடியாத அளவிற்குப் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு விடிவு காலம் காணப்பட வேண்டும். அதற்கு நம்முடைய பிரதமரும், சோனியா காந்தியும் மத்திய அரசும் பொறுப்பேற்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படுமென்று சொல்லிக் கொண்டே காலத்தைக் கடத்தினால், நம்முடைய மீனவர்களின் கதி அதோகதியாகிவிடும்.
கேள்வி: திமுக சார்பில் நீங்கள் கொடுத்த முக்கிய திருத்தங்களை ஏற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறதே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: திமுக சார்பிலும், மற்ற கட்சிகளின் சார்பிலும் கொடுத்த முக்கியமான திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பது திருப்தி அளிக்கிறது. இந்தச் சட்டத்திலே இன்னும் செய்ய வேண்டிய ஒரு சில திருத்தங்கள் இருக்கின்றன. காலப் போக்கில் அவ்வப்போது ஏற்படுகின்ற அனுபவங்களின் அடிப்படையில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
முடிவாக சுமூகமான முறையில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியிருப்பதற்காகவும், திமுக தந்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பதற்காகவும் - இந்தியாவில் உள்ள ஏழையெளிய, சாதாரண சாமான்ய, அடித்தட்டு மக்கள், மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் சார்பாகநான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அதற்கு வாக்களித்த பெருமக்களுக்கும், இந்த மசோதாவைக் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்த சோனியா காந்திக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: அதிமுக எம்பிக்கள் உணவு மசோதாவை எதிர்த்திருக்கிறார்களே?
கருணாநிதி: கால்பட்டால் குற்றம், கை பட்டால் குற்றம் என்று எதையும் எதிர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்கள் வேண்டுமானால், எதிர்த்தால்தான் தங்களுக்கு நல்லது என்று நினைக்கக் கூடும்.
கேள்வி: 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதிலே கொண்டுதான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டதாக கூறுகிறார்களே?
கருணாநிதி: அப்படியானால் எந்த ஒரு அரசு கொண்டுவருகிற திட்டங்களும், சட்டங்களும் அடுத்து வருகிற தேர்தலை குறிவைத்துத்தான் கொண்டு வரப்படுகிறது என்று சொல்வதற்கு இடம் அளித்துவிடக் கூடும்.
கேள்வி: சொத்துக் குவிப்பு வழக்கில் நீங்கள் கேட்டுக் கொண்டவாறு அரசு வழக்கறிஞர் திரும்பப் பெறப்பட்டிருக்கிறாரே?
கருணாநிதி: அது ஒரு நல்ல செய்தி!
கேள்வி: மத்திய அரசு சமையல் சிலிண்டர் விலையை மாதந்தோறும் பத்து ரூபாய் வீதம் ஏற்றப் போவதாக செய்தி வந்திருக்கிறதே?
கருணாநிதி: சமையல் சிலிண்டர் விலையை உயர்த்தாமல், அதிலே நல்ல முடிவு எடுப்பார்களானால், பாதிக்கப்படுபவர்களோடு சேர்ந்து நானும் மகிழ்ச்சி அடைவேன்.












Click it and Unblock the Notifications