ஈரோடு, தஞ்சாவூரில் புதிய ரயில்வே மேம்பாலங்கள் - ஜெ. உத்தரவு
இந்தப் புதிய மேம்பாலங்கள் அங்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெருமளவில் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது...
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் பல இடங்களில், ரயில்வே இருப்புப்பாதைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலை மேம்பாலங்கள் மற்றும் கீழ் பாலங்கள் இல்லாத இடங்களில், வாகனங்கள் ரயில்வே கடவுகளில் அதிக நேரம் காத்திருந்து பயணங்களை தொடர வேண்டியுள்ளதால், பயண நேரம் அதிகமாதல், காலவிரயம் ஏற்படுதல், எரிபொருள் விரயம் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே ரயில் கடவுகளால் போக்குவரத்து பாதிக்காத வகையில், போக்குவரத்து அதிகம் உள்ள ரயில் கடவுப் பகுதிகளில் சாலை மேம்பாலங்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், சங்கரி துர்க் மற்றும் ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே பாலம் மிகவும் பழமையானதாக உள்ளது. இப்பாலம் திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் வழியாக சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை, அதாவது மூன்று மாவட்டங்களை இணைக்கும் பாலமாக உள்ளது.
மேலும் இப்பாலத்திற்கு அருகில் பல்வேறு தொழில் நிறுவனங்களும், பள்ளிகளும் அதிகரித்து வருவதால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. எனவே இந்த பழமையான பாலத்திற்கு பதிலாக ஒரு புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ரயில்வே துறையினர் இப்பாலத்தினை தங்கள் துறையின் மூலம் கட்ட இயலாது எனத் தெரிவித்துள்ள நிலையில், இப்பாலத்தினை மாநில நிதியிலிருந்து கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
எனவே சங்கரி துர்க் மற்றும் ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் 40 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் மாநில அரசின் நிதியிலிருந்து கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூரில்
தஞ்சாவூர் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் ஒரு முக்கிய நகரமாகும். இங்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அதிகம் உள்ளதால், இங்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இந்நகரத்திற்கு அருகிலுள்ள திருச்சி, மன்னார்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்களினாலும், இந்நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
எனவே, தஞ்சாவூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, தஞ்சை டவுன் மற்றும் ஆலக்குடி ரயில் நிலையங்களுக்கிடையில் 29 கோடி ரூபாய் செலவில் ஒரு சாலை மேம்பாலம் அமைப்பதற்கும், தஞ்சை புறவழிச் சாலை இரண்டாம் கட்டப் பணியின் கீழ் வெண்ணாறு நதியின் மீது 7 கோடி ரூபாய் செலவில் ஒரு பெரிய பாலம் அமைப்பதற்கும் என மொத்தத்தில் தஞ்சாவூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பாலங்கள் அமைப்பதற்கு 36 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்வ்ர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் ஈரோடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் சாலைப் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைக்கப்பட்டு, பொதுமக்கள் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறைந்த நேரத்தில் சென்றடைய வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.