தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் எஞ்ஜின் கோளாறு: நடுவழியில் நிறுத்தம்… பயணிகள் அவதி
கோவில்பட்டி: மைசூரில் இருந்து இன்று காலையில் தூத்துக்குடி வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்ஜின் கோளாறினால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி-மைசூர் இடையே இயக்கப்படும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு வழக்கம்போல புறப்பட்டு வந்தது. இந்த ரயில் இன்று காலை கோவில்பட்டி அருகேயுள்ள குமாரபுரம் ரயில் நிலையத்தை கடந்தது. ரயில் நிலையத்தை விட்டு ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்த நிலையில் எஞ்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறால் நடுவழியில் நின்றது.
காலை 10மணிக்கு இடையில் நின்ற இந்த ரயிலால் திருநெல்வேலி வழியாக இயக்கப்படும் நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரயில் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதனைத்தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் மாற்று என்ஜினுடன் சென்று மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை குமாரபுரம் ரயில்நிலையம் கொண்டு சென்று நிறுத்தினர்.
இதன்பின்னர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் சுமார் 2மணிநேரம் தாமத்திற்கு பின்பு குமாரபுரம் ரயில் நிலையத்தை கடந்து சென்றன. இதனைத்தொடர்ந்து மாற்றுஎன்ஜின் பொருத்தப்பட்ட மைசூர் எக்ஸ்பிரஸ் சுமார் 3மணிநேர தாமதத்திற்கு பின்னர் தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்தது.
நடுவழியில் நின்ற ரயிலால் பயணிகள் பெரும் பரிதவிப்பிற்கு ஆளாகினர்.