'பில் லேட்'... அரசு பஸ்களுக்கு டீசல் தர முடியாது... தனியார் பங்குகள் கைவிரிப்பு!
நாகர்கோவில்: பில்லுக்குப் பணம் தருவதில் போக்குவரத்துப் பணிமனைகள் தாமதம் செய்வதால், அரசு பஸ்களுக்கு இனியும் டீசல் தர முடியாது என்று தனியார் பெட்ரோல் பங்குகள் கை விரித்துள்ளனவாம்.
மாநில அரசுக்கு மானியத்துடன் வழங்கப்பட்டு வந்த டீசல் வினியோகத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறுத்தியது. இதனால் மானியம் இல்லாமல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.11 வரை கூடுதலாக வழங்க வேண்டி இருந்ததால் தனியார் பங்கு மூலமே பஸ்களுக்கு டீசல் வினியோகம் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 850 அரசு பஸ்களும், அந்தந்த பணிமனைகளுக்கு உட்பட்ட இடங்களில் உள்ள பெட்ரோல் பஙகுகளுடன் இதற்கான ஓப்பந்தம் செய்யப்பட்டு டீசல் நிரப்பப்பட்டு வந்தது. இதற்கான பில் தொகை அந்தந்த மாதங்களில் முதல் வாரத்திற்குள் செக் மூலம் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சமீப காலமாக பண பட்டுவாடா தாமதம் ஆகிறது. இதன் காரணமாக சில பங்குகள் அரசு பஸ்களுக்கான டீசல் விநியோகத்தை நிறுத்தி விட்டன. இதனால் மாற்று பங்குகளை தேடி அதிகாரிகள் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
நாகர்கோவிலில் உள்ள 4 பனிமனைகளுக்கு தற்போது களியங்காடு பகுதியிலுள்ள பங்கில் டீசல் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பெட்ரோல் பங்குகளுக்கு பணம் கொடுக்கபடாததால் அவை டீசல் வினியோகத்தை நிறுத்தி விட்டன. இதனால் சில பனிமனைகளில் பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.