சென்னை விமான நிலைய குடோனில் பயங்கர கதிர்வீச்சு கருவி: உளவுத்துறை போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை விமானநிலையத்தின் சரக்கு குடோனில் பயங்கர கதிர்வீச்சு கருவி ஒன்று 5 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் அருகில் சரக்கு விமான போக்குவரத்து அலுவலகம் மற்றும் குடோன் உள்ளது. அங்கு உயிருக்கு உலை வைக்கும் பயங்கர கதிர் வீச்சு கருவி ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது. 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கருவி அங்கு இருந்துள்ளது.
பாதுகாப்பு மிகுந்த விமான நிலைய எல்லைக்குள் இந்த கருவி ‘கார்கோ' பகுதியில் நீண்ட காலமாக யாரும் எடுத்து செல்லாமல் இருப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி விமான நிலைய அதிகாரிகளுக்கோ, பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கோ தெரிவிக்கவில்லை.
சென்னை விமான நிலையம் பாதுகாப்பு எச்சரிக்கையில் உள்ளது. அப்படி இருக்கும் பட்சயத்தில் கதிர்வீச்சு கருவி மர்மமாக கிடப்பது அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய உளவுத்துறை அதிகாரிகளும், பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும் ‘கார்கோ' மேலாளர் மெகோ பாட்ராவிடம் விசாரித்து வருகின்றனர்.
இந்த கருவியை அனுப்பியது யார்? யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லை. சென்னை விமான நிலைய ‘கார்கோ' அதிகாரிகள் எதற்காக இத்தனை நாட்களாக தகவல் கொடுக்கவில்லை.
பயங்கர ஆயுதம் பார்சலில் வந்து இருப்பது பற்றி எந்த தகவலும் இதுவரை கூறாமல் இருந்ததன் மர்மம் குறித்து உளவுத்துறை அதிகாரி சாமுவேல், விமான நிலைய உதவி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.