ரிலையன்ஸுக்கு எதிரான மனு: விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்!
டெல்லி: இயற்கை எரிவாயு விலை உயர்வு தொடர்பான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக நீதிபதி தத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அண்மையில் இயற்கை எரிவாயு விலையை உயர்த்தியது. ஆனால் இந்த எரிவாயு விலை உயர்வானது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனால் மத்திய அரசுக்கும், ரிலையன்ஸுக்கும் இடையிலான நெருக்கம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், இதே போன்ற மனு, தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் முன்பு நிலுவையில் இருப்பதாகவும், அந்த பெஞ்சுக்கு இம்மனுவை மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், நீதிபதி எச்.எல்.தத்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மேலும் இம் மனுவை விசாரிக்க விரும்பவில்லை என்று கூறி, விலகிக்கொள்வதாக தெரிவித்தார்.