திருமணம் முடித்த கையோடு இடிந்தகரைக்கு மனைவியுடன் சென்ற சீமான்
இடிந்தகரை: மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைக் கைப்பிடித்த கையோடு இடிந்தகரை போராட்டக்களத்திற்குப் போயுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
புது மனைவியுடன் வந்த சீமானுக்கு இடிந்தகரை மக்கள் சிறப்பான வரவேற்பும், கல்யாணப் பரிசும் கொடுத்து அசத்தி விட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அணு உலைக்கு எதிரான அமைதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மனைவியுடன் முதல் பயணம்
மனைவி கயல்விழியுடன் சீமான் மேற்கொண்ட முதல் பயணம் இதுதான்.
இடிந்தகரை மக்கள் மகிழ்ச்சி
திருமணம் முடித்த கையோடு சீமான், தங்களைப் பார்க்க வந்ததால் இடிந்தகரை மக்கள் குறிப்பாக போராட்டாக்குழுவினர், கிராமத்து மக்கள், பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கேக் வெட்டுங்க மாப்பிள்ளை...
சிறப்பான வரவேற்பு கொடுத்து அழைத்துச் சென்று கேக் வெட்டச் சொல்லினர் இடிந்தகரை மக்கள். சீமானின் மனைவி கயல்விழி நெகிழ்ச்சியுடன் கேக் வெட்டினார். அதை சீமானுக்கு ஊட்டுமாறு மக்கள் கூறவே வெட்கப் புன்னகையுடன் கணவருக்கு கேக் ஊட்டினார் கயல்விழி. அதேபோல அவரும், மனைவிக்கு கேக் ஊட்டினார்.
பொன்னாடை போர்த்தி, ஆரத்தி எடுத்து
முன்னதாக சீமானுக்கும், கயல்விழிக்கும் பொன்னாடை போர்த்தியும், ஆரத்தி எடுத்தும் மக்கள் வரவேற்பு அளித்தனர்.
போராட்டம் குறித்து ஆலோசனை
பின்னர் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக உதயக்குமார் உள்ளிட்டோருடன் பேசினார் சீமான்.