அதிமுக செயற்குழு முன் உள்ள 6 பிரச்சினைகள்: குழப்பத்தில் கூட்டம்
அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் கடும் மோதலில் திடீரென முடித்துக்கொள்ளப்பட்டு, செயற்குழு கூட்டத்துக்கு பிரச்சினைகள் மாற்றம் செய்யப்பட்டது. அதிமுக மா.செக்கள் கூட்டத்தில் பேசுபொருளான அன்வர்ராஜா நீக்கப்பட்ட நிலையில் இன்று செயற்குழு கூட்டம் கூடியுள்ளது. இதில் 6 பிரச்சினைகள் கூட்டத்தின் முன் உள்ள நிலையில் அவை பேசப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கட்டுக்கோப்பான அதிமுக
அதிமுக ஆட்சியில் இருந்தவரை வலுவான கட்டுக்கோப்பான கட்சியாக காட்சி அளித்தது. தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவை பாஜக கையாளுவதுபோன்ற தோற்றம் நிலவியது. பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கியதால் கூட்டணிக்குள் பிரச்சினை ஏற்பட்டது. தேமுதிக கோபித்துக்கொண்டு வெளியேறியது. வேட்பாளர் ஒதுக்கீட்டில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளால் போட்டி வேட்பாளர்கள் பலர் போட்டியிட்டு பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் தோல்விக்கு காரணமாயினர்.
முளைத்த முரண்பாடு
வலுவான அதிமுகவின் வாக்குவங்கி கூட்டணி முரண்பாடு, 10.5% உள் ஒதுக்கீடு, மத்திய அரசை ஆதரித்தது, சுயதன்மை இல்லாதது, தலைமைக்குள் போட்டி, சசிகலாவை ஏற்காத போக்கினால் அமமுக வாக்குகளைப் பிரித்தது போன்ற காரணங்களால் தோல்வியை தழுவியது. கொங்குமண்டல வாக்குகளால் கவுரவமான தோல்வியாக அது அமைந்தது. ஆனாலும் அதன் பின்னர் தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் சசிகலா வலை, உட்கட்சி பிரச்சினை வலையில் சிக்கிக்கொண்டனர்.
திமுக எதிர்ப்பு மங்கிப்போனது
இது திமுக எதிர்ப்பிலும் பிரதிபலித்தது. திமுக எதிர்ப்பே அதிமுகவுக்கு பிரதானம் என்பது மாறி திமுகவை சட்டப்பேரவையில் புகழ்ந்து பதிவு செய்தனர் அதிமுக முன்னணி தலைவர்கள். இவையல்லாமல் கோடநாடு வழக்கை மட்டுமே மையப்படுத்து அதிமுக நகர்ந்ததும் தொண்டர்களுக்கு சோர்வைத்தந்தது. அதிமுக 10.5% ஒதுக்கீடு தர அதைப்பயன்படுத்தி பாமக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிட்டதால் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் வடமாவட்டங்களில் திமுக அணி வெல்ல காரணமாக அமைந்தது.
அம்மா கால அதிமுக புதிய கோஷம்
ஒருங்கிணைக்கப்பட்ட தலைமை வேண்டும், சுய சார்புடன் செயல்பட வேண்டும், அம்மா கால அதிமுக என்கிற கோஷத்தை வைத்த தலைவர்கள் எச்சரிக்கப்பட்டனர், சசிகலா ஆதரவாளர்கள் என நீக்கப்பட்டனர். இடையில் சசிகலாவின் பிரவேசம் எடப்பாடி தரப்பு தலைவர்களுக்கு கடும் கோபத்தை மூட்டியது. அதை நோக்கி நகர்தல் நடந்ததேயன்றி அடிப்படையாக திமுக ஆட்சியை எதிர்த்து அரசியல் செய்வதில் பின்னடைவு ஏற்பட்டது. பல முன்னாள் அமைச்சர்கள் என்ன ஆனார்கள் என்று கேட்கும் அளவுக்கு மவுனமாக இருந்தனர்.
உட்கட்சித் தேர்தல் அதிமுகவை நெருக்கும் தேர்தல் ஆணைய உத்தரவு
அதிமுக உட்கட்சித்தேர்தல் 2014 ஆம் ஆண்டு நடந்தது. ஜெயலலிதா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் உட்கட்சித்தேர்தலே நடக்கவில்லை. சசிகலாவை இடையில் பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக தேர்வு செய்து அதையும் பின் நீக்கிவிட்டனர். 2019-ல் கட்சி விதிகளை திருத்தினர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தின் மையப்பொருளாக உள்ள 6 பிரச்சினைகள்
தற்போது அதிமுக செயற்குழு கூடுகிற நிலையில் கடந்த கூட்டத்தில் பேசுபொருளாக சில கருத்துகளை எடுத்துவைத்த அன்வர்ராஜா திடீர் என விளக்கம் கேட்காமல் நீக்கப்பட்டுள்ளார். அவரது நீக்கம் கட்சிக்குள் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் புகைச்சலுடன் ஆரம்பித்துள்ளது. இதில் அதிமுக முன் 6 பிரச்சினைகள் உள்ளன. அவைகளை விவாதிப்பார்களா புறந்தள்ளுவார்களா என்று கூற முடியாது. ஆனாலும் பிரச்சினை பிரச்சினைத்தான்
6 வகை பிரச்சினைகள் என்னென்ன?
முதல் பிரச்சினை அதிமுக உட்கட்சித் தேர்தலை தேர்தல் ஆணைய உத்தரவுப்படி நடத்தியாகவேண்டிய கட்டாயம் உள்ளது. அவைத்தலைவரையும் தேர்வு செய்ய வேண்டும். அவைத்தலைவர் தேர்தலில் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர் அல்லது செங்கோட்டையன் என்கிற நிலைப்பாட்டில் நிற்பதாக கூறப்படுகிறது. இதனால் அது பிரச்சினைக்குரிய ஒன்றாக இன்றைய கூட்டத்தில் இருக்கும். இதை தள்ளிப்போடவும் முடியாது தேர்தல் ஆணைய உத்தரவு. இதனால் கட்சிக்குள் பிரச்சினை ஏற்படும்.
வழிகாட்டுக்குழு எண்ணிக்கை கூட்டுவது
இரண்டாவது பிரச்சினை வழிகாட்டுக்குழு எண்ணிக்கையை அதிகரிப்பது. இதில் ஓபிஎஸ் ஆதரவாளர் சோழவந்தான் மாணிக்கம் பாஜகவுக்கு தாவிய நிலையில் வழிகாட்டுக்குழுவில் தனது ஆதரவாளர் எண்ணிக்கையை அதிகரிக்க ஓபிஎஸ் முயலுவார். இதனால் இது பிரச்சினைக்குரிய ஒன்றாக மாற வாய்ப்புள்ளது.
மூன்றாவதாக அமைப்புச் செயலாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது. இதிலும் தனது ஆதரவாளர்கள் நீக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வதில் இருதலைவர்களும் முயலுவார்கள்.
அன்வர்ராஜா நீக்கமும், முணுமுணுப்பும்
நான்காவது பிரச்சினை அன்வர்ராஜா நீக்கம், கட்சியில் மாற்றுக்கருத்து வைத்தால் விளக்கம் கேட்காமல் நீக்குவது ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்கு சரியாக இருந்திருக்கும். ஆனால் இரட்டைத்தலைமை உள்ள கட்சியில் விளக்கம் கேட்காமலேயே ஒருவரை நீக்குவது மற்றவர்களுக்கும் நாளை அது நடக்கும் என்பதால் முணுமுணுப்போடு முடியுமா, வெடிக்குமா என தெரியவில்லை. பாஜகவுக்கு தாவிய சோழவந்தான் மாணிக்கத்தை நீக்கவில்லை, அன்வர்ராஜா நீக்கம் மட்டும் அவ்வளவு வேகம் ஏன் என்கிற முணுமுணுப்பும் உள்ளது.
தலைவலியாக உள்ள சசிகலா பிரச்சினை
6 வது பிரச்சினை முக்கிய பிரச்சினை இது சசிகலாவை கட்சிக்குள் வரவிடாமல் தடுப்பது அதுகுறித்து முக்கிய முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி தரப்பு உள்ளது. ஓபிஎஸ் நிலை இதில் குழப்பமான ஒன்றுதான். சசிகலா எதிர்ப்பில் தீவிரம் காட்டும் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் போன்றோர் மட்டும் கட்சி அல்ல என்பது கட்சியில் பலரது முணுமுணுப்பாக உள்ளது. ஆகவே அதுவும் சிக்கலான ஒன்றாக இருக்கும்.
Recommended Video
முடியுமா பிரச்சினை
மற்றபடி மாநகராட்சி தேர்தல், கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு உள்ளிட்டவை வழக்கமான அஜெண்டாவாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது. கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. பிரச்சினைகள் இன்றைய கூட்டத்தோடு முடிவடையாது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.