பொருளாதார நெருக்கடி.. அடுத்த இலங்கையாக மாறும் பாகிஸ்தான்.. பெட்ரோல், பணத்துக்கு கடும் தட்டுப்பாடு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.30 உயர்த்தப்பட்டு இருந்தாலும் கூட நிலையங்களில் பெட்ரோல், டீசல் இல்லாமல் இருப்பதோடு, ஏடிஎம்மில் பணத்துக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அடுத்த இலங்கையாக பாகிஸ்தான் மாறுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக அரசியல்வாதிகளை அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்தார். இவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டது.
பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் சுக்குநூறானது! பிரதமர் மோடி பேச்சால் வானதி சீனிவாசன் உற்சாகம்!
மேலும் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் இம்ரான்கான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார்.
பொருளாதார நெருக்கடி
இதன்மூலம் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு ஏற்பட்டாலும் கூட நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பாகிஸ்தான் கரன்சியின் மதிப்பு சரிந்து வருகிறது. அந்நிய செலவாணி கையிருப்பும் கரைந்து வருவதாக கூறப்படுகிறது. இது பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தில் இன்னும் மோசமான நிலையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு
இது ஒருபுறம் இருக்க தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பொருட்களின் விலைகள் விண்ணை நோக்கி செல்கின்றன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.30 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புதிய விலை உயர்வால் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.179.85க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.174.15க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
இவ்வாறு விலைவாசி உயர்ந்தாலும் கூட தற்போது அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஏடிஎம் இயந்திரங்களிலும் பணம் இல்லை என சொல்ப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஏடிஎம்மில் பணம் இல்லை
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், "லாகூரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை. ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லை. ஒரு சாமானிய மனிதன் ஏன் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்பட வேண்டும்" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த டுவிட்டர் பதிவை அவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் மகள் மரியம் ஷெரீப், வெளியுறவுத்துறை அமைச்சர் புட்டோ உள்ளிட்டோரை டேக் செய்துள்ளார்.
அடுத்த இலங்கையா?
இலங்கையில் ராஜபக்சே சகோதரர்களின் தவறான பொருளாதார கொள்கையால் அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் பல்வேறு உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் அங்கு அவரச நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. தற்போது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ள நிலையில் அந்த பதவியில் ரணில் விக்ரமசிங்கே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இன்னும் இலங்கை பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஏறக்குறைய அந்நாடு திவாலாகி விட்டதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி நிலை மெல்ல அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.