நட்ட நடு பெங்களூரில்.. ஏடிஎம் மையத்தில்.. பெண் மேனேஜரை சரமாரியாக வெட்டிய கொள்ளையனுக்கு 10 வருட சிறை
பெங்களூர்: பெங்களூர் நகரை மட்டுமல்லாது.. ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய.. ஏடிஎம் மையத்துக்குள் பெண்ணை தாக்கி நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.
2013ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி. ஒரு குளிரான காலை நேரம். பெங்களூரில் மையப்பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் சர்க்கிள் அருகேயுள்ள யூனியன் வங்கி கிளையில் மேலாளராக பணி புரிந்த ஜோதி உதய், அன்று தனக்கு நிகழப்போகும் மிகப்பெரிய அசம்பாவிதத்தை அப்போது உணர்ந்திருக்கவில்லை.
மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்தான் ஜோதி மனதில் நிறைந்திருந்தது. காலை, 6:30, ஷிப்ட் வேலை, என்பதால் அப்போது அவர் கார்ப்பரேஷன் சர்க்கிள் பகுதிக்கு வந்திருந்தார்.
ஏடிஎம் மையத்திற்குள் கொள்ளையன்
அங்குள்ள கார்ப்பரேஷன் வங்கியின் ஏடிஎம் மையத்துக்கு சென்று, பணம் எடுத்துக்கொள்ளலாம்.. மகளுக்கு தேவையான பொருட்களை, வேலை முடிந்ததும் வாங்குவதற்கு அது உதவியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். அதேபோல ஏடிஎம் மையத்திற்குள் சென்றார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு கொள்ளையன் உள்ளே புகுந்து திடீரென ஏடிஎம் ஷட்டரை இழுத்து மூடினான்.
அரிவாளால் வெட்டு
தனது கையில் இருந்த அரிவாளால் பெண் என்றும் பார்க்காமல் ஜோதி மீது சரமாரியாக வெட்ட தொடங்கினான். ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தார் ஜோதி உதய். இதையடுத்து அவரிடமிருந்த மற்றும் ஏடிஎம் அட்டை மற்றும் செல்போன் ஆகியவற்றை தூக்கிக் கொண்டு அந்தக் கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான். அந்த பக்கமாக நடந்து சென்ற சிலர் ரத்தவெள்ளத்தில் ஜோதி மிதப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பிஜிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
உயிர் தப்பிய ஜோதி
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார் ஜோதி. இருப்பினும் மருத்துவர்களின் தீவிர முயற்சி காரணமாக, உயிர் தப்பினார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தது ஏடிஎம் மையத்துக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான கொலை முயற்சி காட்சி மட்டும்தான். தொலைக்காட்சிகளில் அந்த காட்சி ஒளிபரப்பாகி பார்ப்போர் நெஞ்சத்தைக் பதைக்க வைப்பதாக இருந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி யார்? அவன் எங்கே தப்பிச் சென்றான்? என்பது பற்றி எந்த ஒரு துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
வழக்கே மூடப்பட்டது
ஒரு கட்டத்தில்.. குற்றவாளி கிடைக்கவில்லை என்று வழக்கு இழுத்து மூடப்பட்டது. அந்த நேரத்தில்தான், 2017ம் ஆண்டு, ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில், ஒரு கொலை வழக்கில் மதுகர் ரெட்டி என்பவன் கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடத்தியபோது பெங்களூரு ஏடிஎம் மையத்தில் வங்கி மேலாளர் மீது தாக்குதல் நடத்தியது, தான் தான், என்பதை ஒப்புக் கொண்டான். இதுதான் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்தது. இதையடுத்து போலீசார் மீண்டும் விசாரணையை துவங்கி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
10 வருடம் கடுங்காவல் தண்டனை
இந்த வழக்கு பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்திலுள்ள, செஷன்ஸ் கோர்ட்டில், நடைபெற்று வந்தது. நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மதுகர் ரெட்டிக்கு 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோதி உதய், தனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் நன்றி தெரிவித்தார். மேலும் நீதிமன்றம் சரியான தீர்ப்பு உரிய நேரத்தில் வழங்கியுள்ளது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மீடியா மீது தப்பு
அதே நேரம். தான் "தாக்கப்பட்ட வீடியோ ஊடகங்களில் பெரிதாக ஒளிபரப்பப்பட்ட காரணமாகதான் குற்றவாளி பெங்களூரில் இருந்து தப்பி ஓடி விட்டான், அல்லது போலீசார் அவனை கைது செய்து இருப்பார்கள்.. மீடியாக்கள் மீது இந்த விஷயத்தில் தவறு இருப்பதாகத் தான் நான் கூறுவேன். மேலும் சிகிச்சையின் போது எனது வங்கி அதற்கான செலவு தொகையை ஏற்றுக் கொண்டு மிகவும் உதவிகரமாக இருந்தது. இந்த சம்பவத்தை எனது வாழ்நாளில் மறக்கவே முடியாது. ஆனால் அதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று ஜேசி ரோடு யூனியன் வங்கி கிளையின், மேனேஜர் இருக்கையில் அமர்ந்தபடி புன்முறுவலுடன் கூறுகிறார், தற்போது 51 வயதாகும் ஜோதி.
அலர்ட்டான கர்நாடக போலீஸ்
இந்த வழக்கை, அல்சூர் கேட், உதவி போலீஸ் கமிஷனராக அப்போது பதவி வகித்த திம்மையா தீவிரமாக விசாரித்து வந்தார். தற்போது சிஐடி பிரிவில் பணியில் இருக்கும் அவர் தனது நினைவலைகளை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்: எந்த ஒரு தடயமும், துப்பும் கிடைக்காததால் வழக்கு மூடப்பட்டது. ஆனால் மதனபள்ளி போலீஸ் நிலையத்தில் இருந்து இந்த குற்றம் தொடர்பான சில தகவல்கள் கிடைத்ததும் இந்த வழக்கில் திருப்பம் ஏற்படும்.. குற்றவாளிபிடிபட்டு விடுவான் என்று நம்பினோம். இதையடுத்து மதனபள்ளி காவல் நிலையத்திலிருந்து மதுக்கர் எங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டான்.
சபாஷ் காவல்துறை
குற்றவாளியை அடையாளம் காட்டும்படி ஜோதியை அழைத்து கேட்டுக்கொண்டோம். அவரும் குற்றவாளிகள் அணிவகுப்பில் சரியாக இவனை அடையாளம் காட்டினார். ஒரு குற்றத்தை செய்து விட்டு அங்கிருந்து வேறு பகுதிக்கு தப்பி ஓடி விடுவது இவனது வாடிக்கையாக இருந்தது. இதன் காரணமாகத்தான் பிடிபடாமல் இருந்து வந்தான். ஆனால், இந்த குற்ற வழக்கில், குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த சில தடயங்களையும், இவனது உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளையும் ஒப்பீடு செய்து அதை உறுதி செய்தோம். சிசிடிவி கேமரா காட்சி, வழக்கிற்கு உதவியது. இதுபோன்ற காரணங்களால் உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். என்று தெரிவித்தார் பெருமிதத்துடன்.