கர்நாடகாவில் பரபரப்பு.. ஓமிக்ரான் கண்டறியப்பட்ட நபருடன்.. தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி
பெங்களூரு: கர்நாடகாவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட 46 வயதான நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஓமிக்ரான் கொரோனா தான் தற்போது உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. வெறும் சில நாட்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
இதனால், எங்கு டெல்டா கொரோனாவை போல மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துமோ என உலக நாடுகள் அஞ்சுகின்றன. இதனால் பல்வேறு நாடுகளும் புது கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
'இந்தியாவுக்குள் நுழைந்த ஓமிக்ரான்.. யாரும் பீதியடையத் தேவையில்லை, ஆனால்..' மத்திய அரசு கூறுவது என்ன
ஓமிக்ரான் கொரோனா
இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இன்று இந்தியாவிலும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் இரண்டு பேருக்கு இந்த புதிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. இருவருக்கும் லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும் அறிகுறிகளும் கூட தீவிரமாக இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2 பேருக்குப் பாதிப்பு
ஓமிக்ரான் கண்டறியப்பட்ட இருவரில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் மருத்துவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. பெங்களூரில் வசித்து வரும் அந்த மருத்துவர் ஏற்கனவே 2 டோஸ் வேக்சின் போட்டுக்கொண்டவர். அவர் சமீபத்தில் எந்த வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேருக்கும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா
இந்நிலையில், கர்நாடகாவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட அந்த 46 வயதான நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த 5 பேரின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இது அம்மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
என்ன நடந்தது
ஓமிக்ரான் இருப்பதாக கண்டறியப்பட்ட அந்த 46 வயதான நபர் பெங்களூருவில் சுகாதார ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த நவம்பர் 21ஆம் தேதி அவருக்குக் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டது. அதன்படி நேரடியாகத் தொடர்பில் இருந்த 13 பேருக்கும் secondary contacts 250 பேருக்கும் தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.