வருது வருது.. பெங்களூர் வழியாக சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில்.. 11-ம் தேதி தொடங்கி வைக்கிறார் மோடி
பெங்களூர்: வருகிற 11-ஆம் தேதி பெங்களூர் வழியாக சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் போக்குவரத்திற்கு முதுகெலும்பாக உள்ளது ரயில்வேதான். நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் தேவைகளுக்காக ரயில்சேவையை பயன்படுத்தி வருகின்றன.
தொலைதூர பயணங்களுக்கு சொகுசு மற்றும் பாதுகாப்பான சேவை அளிப்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மட்டும் இன்றி வசதி படைத்தவர்கள் கூட ரயிலில் செல்வதையே மிகவும் விரும்புகின்றனர்.

வந்தே பாரத் ரயில் சேவை
இதனால், ரயில்பயணிகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அதி நவீன சொகுசு ரயில்களை இயக்குவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் சதாப்தி, வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நவீன வசதிகள் மற்றும் அதிவேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் பயணிகளை மிகவும் கவரும் வகையில் அமைந்து உள்ளது. இதையடுத்து வந்தே பாரத் ரயில்களை முக்கிய வழித்தடங்களில் ரயில்வே துறை அறிமுகம் செய்து வருகிறது.

11-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்
இது வரை நாட்டில் 4 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தென் இந்தியாவில் இந்த ரயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சேவையாகவும், தென் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையாகவும் சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை அடுத்த மாதம்(நவம்பர்) 11-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூர் வருகிறார் மோடி
இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:- வருகிற 11-ஆம் தேதி பிரதமர் மோடி பெங்களூர் வருகிறார். இதற்காக பிரதமர் மோடி அன்று காலை 10 மணிக்கு பெங்களூர் எச்.ஏ.எல். விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம் வருகை தருகிறார். அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் 2 வது முனையத்தை மோடி திறந்து வைக்கிறார்.

வெண்கல சிலை
மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். தொடர்ந்து அங்கு பிரதமர் மோடி பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதைத்தொடர்ந்து சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்தபடி தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

திண்டுக்கல்லில் பட்டமளிப்பு விழா
இதேபோல் அன்றைய தினம் பிரதமர் மோடி தமிழத்தின் திண்டுக்கல் மாவட்டத்துக்கும் வருகை தருகிறார். திண்டுக்கலில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இந்த விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி உரையாற்ற உள்ளார்.












Click it and Unblock the Notifications