என்னை நாசமாக்கி மகளையும் வேட்டையாட முயற்சி..தேவகவுடா மகன், பேரன் மீது பணிப்பெண் அதிர்ச்சி புகார்!
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா எம்.எல்.ஏ, அவரது மகனும் ஹாசன் சிட்டிங் எம்பியும் தற்போது பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவும் எப்படியெல்லாம் பாலியல் கொடுமைகளை நிகழ்த்தினர் என போலீசில் பணிப்பெண் அதிர்ச்சி புகார் கொடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா எம்.எல்.ஏ, இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா. ஹாசன் லோக்சபா தொகுதியின் சிட்டிங் எம்.பி. அத்துடன் ஹாசனில் பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார் பிரஜ்வல்.

கர்நாடகாவில் காட்டுத் தீயாக பரவிய வீடியோக்கள்: கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 26-ந் தேதி ஹாசன் உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. எஞ்சிய தொகுதிகளுக்கு மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு முன்னதாக ஹாசன் தொகுதி முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டன. அத்துடன் பெண்கள் அமைப்பினரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர்.
பிரஜ்வல் தப்பி ஓட்டம்: 300க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து வீடியோக்களாக பிரஜ்வல் ரேவண்ணா பதிவு செய்து வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நாகலட்சுமி, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் அனுப்பினார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா, இந்தியாவை விட்டே தப்பி ஓடி ஜெர்மனியில் பதுங்கிவிட்டார்.
பெங்களூரில் போராட்டம்: இந்நிலையில் பெங்களூரில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அப்போது கைகளில் துடைப்பத்துடன் பிரஜ்வல் ரேவண்ணாவை உடனே கைது செய்யக் கோரி முழக்கங்களும் எழுப்பினர். மேலும் பிரஜ்வல் ரேவண்ணாவின் படங்களை காலணிகளால் அடித்தும் ஆவேசத்தைக் காட்டினர்.
என்ன செய்தார் பிரஜ்வல்?: இதனிடையே ரேவண்ணா, அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் பலாத்கார வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். ரேவண்ணா- பிரஜ்வல் வீட்டு பணிப்பெண் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேவண்ணா வீட்டு பணிப்பெண் போலீசில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளதாவது: ரேவண்ணாவின் மனைவி வீட்டில் இல்லாத போது ரேவண்ணாவும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும் பெண்களை பலாத்காரம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். பிரஜ்வல் என்னை அவரது அறைக்கு அழைத்த போதே சிலர் எச்சரித்திருந்தனர்.
ஸ்டோர் ரூம், மகளுக்கு டார்கெட்: பிரஜ்வல் ரேவண்ணா ஸ்டோர் ரூமுக்குதான் முதலில் வரவழைப்பார். அங்கு தொடக் கூடாத இடங்களில் தொட்டு ஆபாசமாக நடந்து கொள்வார். பின்னர் சேலையின் பின்னையும் அவரே கழற்றிவிட்டு பலாத்காரம் செய்தார். ஒரு கட்டத்தில் என் மகளுடனும் ஆபாசமாக வீடியோ காலில் பேசத் தொடங்கினார் பிரஜ்வல். என் மகளோ குலைநடுங்கிப் போய் பிரஜ்வலின் மொபைல் எண்ணையே பிளாக் செய்துவிட்டார். அப்பாவும் மகனும் பெண்களை சூறையாடுவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே தற்போது பகிரங்கமாக போலீசில் புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு அந்த பெண் போலீசில் தெரிவித்துள்ளார்.
என்ன என்ன பிரிவுகளில் வழக்கு?: ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா காவல் நிலையத்தில்தான் ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 354(A), 354 (D), 506, 509 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாலியல் தொல்லை தருதல், கிரிமினல் செயலில் திட்டமிட்டு செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகள் இவை.












Click it and Unblock the Notifications