வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்! பெங்களூரில் பைக்கில் சென்று கொண்டே லேப்டாப்பில் வேலை செய்த இளைஞன்
பெங்களூரு: சமீபத்திய நாட்களாக மனிதர்கள் அவசர அவசரமாக எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருப்பதை போல தோன்றுகிறது. இந்த சிந்தனையை சில நிகழ்வுகளும் அவ்வப்போது உறுதி செய்து வருகின்றன. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் பெங்களூரு நகரத்தின் மைய மேம்பாலம் ஒன்றில் பைக்கில் அமர்ந்தபடி ஒருவர் லேப்டாப்பை வைத்து வேலை செய்துகொண்டே பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. லிங்க்ட்இன் எனும் சமூக வலைதளத்தில் ஹர்ஷ்மீத் சிங் எனும் பயனர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று பயங்கர வைரலானது. புகைப்படத்துடன், "பெங்களூரு சிறப்பானதா அல்லது மோசமானதா?" என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

மேலும், "இரவு 11 மணியளவில் நகரத்தின் பரபரப்பான மேம்பாலம் ஒன்றில் இந்த இளைஞன் லேப்டாப் வைத்து வேலை செய்தவாறு பயணித்துக்கொண்டிருக்கிறான். சக ஊழியரின் உயிரை பணயமாக வைத்து அவசரமாக வேலையை முடிக்க விரும்பும் தலைமையா நீங்கள்? எனில் உங்களின் சிந்தனையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது" என்றும் குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார்.
இந்த போஸ்ட்க்கு ஏறத்தாழ 40,000 லைக்குகள் குவிந்துள்ளன. பலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இதில் சிலர் ஹர்ஷத்தின் கருத்தை வரவேற்றனர். பலர் மாற்று கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். சிலர் இது பெங்களூரு இல்லை எனவும் கூறியுள்ளனர்.
சர்வதேச அளவில் சாலை விபத்துக்களில் சராசரியாக ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 93 சதவிகித விபத்துகள் வளர்ந்து வரும் நாடுகளில்தான் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 3,66,138 பேர் சாலை விபத்துகளில் சிக்கியுள்ளனர். இதில் 1,31,714 பேர் உயிரிழந்துள்ளனர். 3,48,279 பேர் படுகாயமடைந்துள்ளதாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications