பெங்களூர் ஏர்போர்ட்டில் கட்டு கட்டாக 74 லட்சத்தோடு சிக்கிய சென்னை கஸ்டம்ஸ் அதிகாரி.. சிபிஐ வழக்கு
பெங்களூர்: சென்னையைச் சேர்ந்த சுங்கத் துறை அதிகாரி ஒருவர் மற்றும் அவரது மனைவியிடமிருந்து கணக்கில் வராத சுமார் 74 லட்சம் ரொக்கப் பணம், தங்க நகைகள் பெங்களூர் விமான நிலையத்தில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சுங்கத் துறை அலுவலகத்தில் 2016ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பணிக்குச் சேர்ந்தவர் முகமது இர்பான் அகமது. கடந்த வருடம் ஜனவரி மாதம், இவர் பதவி உயர்வு பெற்று சுங்கத் துறை கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
2020 ஜூலை 13ம் தேதி முதல் 2021, ஜனவரி 21ம் தேதி வரை சென்னையிலுள்ள சுங்க பிரிவில் முகமது இர்பான் அகமது கண்காணிப்பாளராக பதவியில் இருந்தார்.

மனைவியுடன் பெங்களூர் ஏர்போர்ட் சென்றார்
முகமது இர்பான் அகமது மனைவி தஸீம் மும்தாஜ், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வரை டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றினார், பிறகு அவர் வீட்டில் இருந்து குடும்பத்தை பார்த்து வருகிறார். இந்த நிலையில்தான், முகமது இர்பான் அகமது மற்றும் அவரது மனைவி மும்தாஜ் ஆகியோர், சென்னையிலிருந்து, பெங்களூர் வழியாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ நகரத்திற்கு விமானப் பணம் மேற்கொண்டனர்.

லக்கேஜ் சோதனை
பெங்களூரில் அவர்கள் செல்ல வேண்டிய விமானத்தைத் தவற விட்டுள்ளனர். இந்த நிலையில்தான், விமானநிலையத்தில் இந்த தம்பதிகள் வைத்திருந்த லக்கேஜ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

கட்டு கட்டாக பணம்
அப்போது, அவர்களிடம் 74 லட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 169.05 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள், ஆப்பிள், ஒன் பிளஸ் ஒன் உட்பட, 5 விலை உயர்ந்த செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது உரிய பதிலை சொல்லவில்லை. அவர்கள் காட்டிய கணக்கு திருப்தியளிக்கும் விதமாக இல்லை.

உறவினர்கள்
இதையடுத்து இந்த பணம் மற்றும் பொருட்களை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து முகமது இர்பான் அகமது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அப்போது சுமார் 64 ஆயிரம் ரொக்கம், 2.84 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கள் உறவினர்களிடமிருந்து கடன் பெற்ற பணத்தைதான் விமான நிலையத்தில் பறிமதுல் செய்துவிட்டதாக, முகமது இர்பான் அகமது மற்றும் அவரது மனைவி தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த குறிப்பிட்ட உறவினர்களிடம் விசாரித்தபோது, அப்படி பணம் எதுவும் கடனாக தாங்கள் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சிபிஐ விசாரணை
இது தொடர்பாக சென்னை சிபிஐ பிரிவு முகமது இர்பான் அகமது மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கஸ்டம்ஸ் அதிகாரி என்பதால் மத்திய அரசின் பணியாளர் என்ற பிரிவின்கீழ் வருவதால், வருமானத்தில் கணக்கு காட்ட முடியாத இந்த விவகாரம் பற்றி சிபிஐ விசாரணை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications