புனித் ராஜ்குமார் உயிரை பறித்த தாமதம்.. சீரியசான பிறகுதான் மருத்துவமனையில் அட்மிட்.. நடந்தது என்ன?
பெங்களூர்: நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிறகு மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதுதான், அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனதற்கு காரணம். மருத்துவரின் பேட்டியும் இதை உறுதி செய்துள்ளது.
Recommended Video
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஜாம்பவான் நடிகர் ராஜ்குமார். அவருக்கு மூன்று மகன்கள். மூன்று பேருமே திரைத் துறையில் இருந்தாலும் கூட இரண்டாவது மகன் சிவராஜ்குமார் மற்றும் கடைசி மகன் புனித் ராஜ்குமார் ஆகிய இருவரும் மிகப் பெரிய ரசிகர் வட்டத்தை கொண்ட சூப்பர்ஹிட் நடிகர்கள்.
இந்த நிலையில்தான் இன்று காலையில் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்ற புனித் ராஜ்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

நெஞ்சு வலி
புனித் ராஜ்குமார் நெஞ்சுவலி என்று கூறிய பிறகும் கூட உடனே மருத்துவமனைக்கு போகவில்லையாம். அவருக்கு வலி அதிகரித்த நிலையில் இதன் பிறகு பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை
மதியம் 12 மணி அளவில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அப்போதே நிலைமை மிகவும் மோசமாக போய் விட்டதாக கூறப்படுகிறது. எனவே ஈசிஜி உள்ளிட்ட சோதனைகளை விரைவாக எடுத்துள்ளார்கள் அவருக்கு மாரடைப்பு என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மோசமான நிலை
இந்த நிலையில் மதியம் 1 மணியளவில் விக்ரம் மருத்துவமனையின் மருத்துவர் ரங்கநாத் நாயக் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து வருகிறோம். ஆனால் அவரது நிலைமை மோசமாக இருக்கிறது . இப்போதைக்கு நாங்கள் எதையும் சொல்ல முடியாது. மருத்துவமனைக்கு அவரை அழைத்து வரப்பட்டபோதே உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புனித் ராஜ்குமார் மரணம்
இந்த தகவலறிந்ததும் மருத்துவமனைக்கு வெளியே ரசிகர்கள் கூடி கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தனர். பெங்களூரின் பல பகுதிகளிலும் மைசூரு உள்ளிட்ட பிற நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் அவசரஅவசரமாக வீடுகளுக்கு திரும்பினர். இதனிடையே இன்று மதியம் 2.30 மணியளவில், புனித் ராஜ்குமார் மரணமடைந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு முதல்
நேற்று இரவு முதல் புனித ராஜ்குமார் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. ஆனால் அது சாதாரண பிரச்சினை என்று நினைத்து அவரும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளவில்லை. இதற்கிடையே உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று காலையில் உடற்பயிற்சி செய்துள்ளார். இது அனைத்து பிரச்சினைகளும் சேர்ந்து அவரது உடல்நிலையில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications