ஹிஜாப் தடை.. கர்நாடகாவில் இவ்வளவு பாதிப்பா? சரிபாதியாக சரிந்த இஸ்லாமிய மாணவர் சேர்க்கை
பெங்களூரு: கர்நாடக கல்வி நிலையங்களில் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு விதித்த தடையின் காரணமாக கடந்த ஆண்டு பெரும் போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தன. ஹிஜாபுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கடந்த ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளுக்கும் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது மேலும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனால் ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்கள் வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கர்நாடக கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியக்கூடாது என்றும் சீருடையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டது.

கல்வி நிலையங்களில் மோதல்
இந்த நிலையில் குந்தபுராவில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினர் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து காவித் துண்டு அணிந்து வகுப்புக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த பிரச்சனையும் போராட்டமும் மற்ற கல்லூரிகளுக்கும் பரவி கர்நாடகாவில் வன்முறை வெடித்தது.

நாடு முழுவதும் போராட்டம்
இதனை அடிப்படையாக கொண்டே தொடர்ந்து மாணவிகளை அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர். ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடகா உட்பட நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்தன.

செய்முறைத் தேர்வு
இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செய்முறை தேர்வு நடைபெற்றது. இதற்கு வழக்கம்போல் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்காததால் அவர்கள் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டது.

கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
இதற்கு அப்போது கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், முதல் தவணை செய்முறை தேர்வு எழுதாத மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என கர்நாடக அரசு அறிவித்து இருந்தது. இதனால் மாணவிகள் ஆறுதல் அடைந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்து தேர்வெழுதாத மாணவிகளுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படாது கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வில் தோல்வி
கர்நாடக பியு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 100 மதிப்பெண்களில் 30 மதிப்பெண் செய்முறை தேர்விலும் 70 மதிப்பெண் எழுத்துத்தேர்வு மூலமாகவும் வழங்கப்பட்ட நிலையில், செய்முறை தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் 30 மதிப்பெண்களை மாணவிகள் இழக்கும் நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக வெளியான தேர்வு முடிவுகளிலும் பலர் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உடுப்பி மாணவிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

உடுப்பி இஸ்லாமிய மாணவிகள்
இந்த நிலையில் ஹிஜாப் தடை காரணமாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள பியு கல்லூரிகளில் சேரும் இஸ்லாமிய மாணவிகளின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பியுசி முதலாம் ஆண்டில் கடந்த 2021 - 2022 கல்வியாண்டில் 388 பேர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த நிலையில், நடப்பு 2022-23 ஆம் ஆண்டில் 186 இஸ்லாமிய மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications