தமிழகத்துக்கு 3,000 கனஅடி நீர் திறக்கனும்! காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை! கர்நாடகா ஷாக்
பெங்களூர்: தமிழகத்துக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறக்க கூறிய நிலையில் இனி காவிரியில் நீர் திறந்து விட முடியாது என காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா உறுதியாக கூறியது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கூட்டத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் 18 நாட்கள் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது
தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கர்நாடகா தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டு வருகிறது. இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேஆர்எஸ் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் பந்த் நடந்த நிலையில் இன்று பெங்களூரில் பந்த் நடந்து வருகிறது. வரும் 29 ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பெங்களூர் பந்த் போராட்டத்தையொட்டி தமிழக-கர்நாடகா எல்லையில் தமிழக பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கூடாது என கர்நாடகா பாஜக, ஜேடிஎஸ், ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதோடு பந்த் போராட்டங்களுக்கும் வெளிப்படையாக ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதனால் இருமாநிலங்கள் இடையேயான பதற்றம் என்பது அதிகரித்து வருகிறது.
இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடக்கும் கூட்டத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் கர்நாடகா அரசு சார்பில் முக்கிய கோரிக்கைகள் வைத்தனர்.
தமிழக அரசு சார்பில், ‛‛தமிழகத்துக்கு கர்நாடகா சரியாக வகையில் தண்ணீர் திறந்து விடவில்லை. உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி மாதாந்திர தண்ணீர் அளவை வழங்கவில்லை. இதனை வழங்க உத்தரவிட வேண்டும். நிலுவையில் உள்ள தண்ணீரை உடனே திறந்து விட வேண்டும். அதன்படி 12,500 கனடி நீரை காவிரியில் தமிழகத்துக்கு திறக்க உத்தரவிட வேண்டும்'' என வாதம் முன்வைக்கப்பட்டது.
இதை கேட்ட கர்நாடகா தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. கர்நாடகா அரசு சார்பில், ‛‛
காவிரியில் இருந்து இதற்கு மேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் 53 சதவீதம் மழை பற்றாக்குறை நீடிக்கிறது. தற்போது வரை 123 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் மழை குறைப்பாட்டால் 40 டிஎம்சி வரை கொடுத்துள்ளோம்.
அதோடு எங்களுக்கு குடிநீருக்கு தற்போது பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது. இதனால் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்'' என வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து காவிரி ஒழுங்காற்று குழு சார்பில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை வழங்கப்பட்டது. அதில் வரும் 28ம் தேதி காலை 8 மணி முதல் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவில் 3 ஆயிரம் கனஅடி நீர் கிடைக்கும்படி தண்ணீர் திறக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா ஷாக்காகி உள்ளது.












Click it and Unblock the Notifications