கர்நாடகாவில் பைக் டாக்சிக்கு தடை? அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு.. அடுத்து என்ன! உடனே வந்த விளக்கம்
பெங்களூர்: கர்நாடக அரசு தனது மாநிலத்தில் மின்சார பைக் டாக்ஸி திட்டத்தை முற்றிலுமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. முன்பு பெருநகரங்களில் மட்டுமே இருந்த டிராபிக் பாதிப்பு இப்போது இரண்டாம் கட்ட நகரங்களைக் கூட விட்டுவைக்கவில்லை. இதனால் சொன்ன நேரத்தில் சொன்ன இடத்திற்குச் செல்வதில் சிரமம் இருக்கிறது.

இந்த டிராபிக் பாதிப்பிற்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் பைக் டாக்சி.. டிராபிக் அதிகமாக இருந்தாலும் குறைந்த செலவில் வேகமாகச் செல்ல வேண்டிய இடத்திற்கு பைக் டாக்சி மூலம் செல்ல முடிவதால் பலரும் அதைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் பைக் டாக்சியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பைக் டாக்சி: இதற்கிடையே இந்த மின்சார பைக் டாக்ஸி திட்டத்தைக் கர்நாடக அரசு தடை செய்துள்ளது. மின்சார பைக் டாக்ஸி திட்டம் 2021, மோட்டார் வாகனச் சட்டத்தை மீறுவதாகவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக உள்ளதாகத் தெரிவித்த கர்நாடக அரசு மின்சார பைக் டாக்ஸி திட்டத்தை ரத்து செய்துள்ளது. கடந்த 2021இல் மின்சார பைக் டாக்ஸி தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், அதையும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
ஆட்டோ ரிக்ஷா தொழிற்சங்கங்கள் இந்த மின்சார பைக் டாக்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பைக் டாக்சி தொடர்பாக முடிவெடுக்க வல்லுநர் குழுவை கர்நாடக அரசு அமைத்திருந்தது. அந்த வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே பைக் டாக்சிக்களுக்கு தடை விதிக்கும் முடிவைக் கர்நாடக அரசு எடுத்துள்ளது.
அதிகாரப்பூர்வ உத்தரவு: இது குறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தற்போது, செயலி மூலம் இயங்கும் தனியார் நிறுவனங்கள், மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை மீறி, வணிக போக்குவரத்து அல்லாத இருசக்கர வாகனங்களைச் சட்டவிரோதமாக வணிக போக்குவரத்து வாகனங்களாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதனால் பல மோதல் சம்பவங்களும் நடந்து மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுகிறது.
இத்திட்டம் பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக உள்ளது. இந்தத் திட்டம் போக்குவரத்துத் துறைக்கு வருமானம் ஈட்டுவதையும், விளம்பரப் பணிகளைத் திறம்பட நடத்துவதையும் கடினமாக்குகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பைக் டாக்ஸியை பொறுத்தவரை ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆகியவை முக்கிய தளங்களாக இருக்கிறது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு முதல் ஓலா நிறுவனம் தனது பைக் டாக்ஸி சேவையை முழுவதுமாக மின்சார வாகனங்களுக்கு மாற்றியது. அதேநேரம் ரேபிடோ மற்றும் ஊபர் வழக்கமான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் மின்சார பைக்குகளில் சேவை வழங்குகிறது. தேசியளவில் ரெபிடோ நிறுவனம் தான் 60% சந்தையை வைத்துள்ளது.
உடனே வந்த விளக்கம்: குறிப்பாக ரேபிடோவின் பைக் டாக்ஸி மிகப்பெரிய சந்தையாகக் கர்நாடகா உள்ளது, சமீபத்தில் தான் அவர்கள் கார் டாக்ஸி மற்றும் ஆட்டோ சேவையையும் ஆரம்பித்தனர். இந்தச் சூழலில் தான் கர்நாடக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு மின்சார பைக் டாக்சி தொடர்பானது என்றும் அது வேறு திட்டம் என்பதால் தங்கள் சேவைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று ரேபிடோ விளக்கமளித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒலா, ஊபர் எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.












Click it and Unblock the Notifications