நைட் ரோந்து போலீஸ்காரர் செய்யும் வேலையா இது.. அதிர்ந்துபோன பெங்களூர்!
பெங்களூர்: பெங்களூரில் காதலனை தேடி இரவில் பூங்காவில் அமர்ந்திருந்த 17 வயது சிறுமியிடம் உதவி செய்வதாக கூறி வீட்டுக்கு அழைத்து சென்று போலீஸ்காரர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும், சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2 பேர் நெருங்கிய நண்பர்களாகினர். இந்த நெருக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி
அதன்படி கடந்த 27ம் தேதி சிறுமி தனது வீட்டில் இருந்து வெளியேறினார். பெங்களூர் வந்து அழைத்து செல்வதாக கூறிய அவரது காதலனுக்காக கோவிந்தராஜ் நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பூங்காவில் சிறுமி காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவரது காதலன் வரவில்லை. போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் தன் காதலன் வந்து தன்னை கூட்டி செல்வான் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து சிறுமி காத்திருந்தார். ஆனால் கடைசி வரை காதலன் வரவே இல்லை.

பூங்காவில் அமர்ந்திருந்த சிறுமி
இதனால் செய்வதறியாது திகைத்த சிறுமி வீட்டுக்கு செல்லவும் பயந்தார். இதனால் இரவில் சிறுமி அங்குள்ள பூங்காவில் அமர்ந்து இருந்தார். இந்த வேளையில் பெங்களூர் கோவிந்தராஜ் நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரராக பவன் தியாவன்னவர் ரோந்து வந்தார். பூங்காவில் அமர்ந்திருந்த சிறுமியை அவர் பார்த்தார். இதையடுத்து சிறுமியை அழைத்து அவர் விசாரித்தார்.

உதவுவதாக கூறிய போலீஸ்காரர்
அப்போது சிறுமி சம்பவம் குறித்து அவரிடம் கூறினார். இதைக்கேட்ட பவன், சிறுமிக்கு உதவி செய்வதாக கூறினார். மேலும் காதலனுடன் சேர்த்து வைக்க உதவி செய்வதாகவும் நம்பிக்கை அளித்தார். மேலும் இன்று இரவு தனது வீட்டில் பாதுகாப்பாக தங்கிவிட்டு நாளை காலை காதலனை தேடி செல்லும்படி அவர் கூறினார். இதை கேட்ட சிறுமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிறுமியை பவன் விஜயநகரில் தான் வசிக்கும் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

சிறுமி பலாத்காரம்
அதன்பிறகு அவர் சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவம் குறித்து வெளியே கூற வேண்டாம் எனக்கூறிய பவன், மறுநாள் காலையில் சிறுமியை பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு ரூ.500 கொடுத்து சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்கு பஸ்சில் செல்ல உதவினார். சிறுமியும் பஸ்சில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள காதலன் வீட்டுக்கு செல்லவே அங்கு அவரது தந்தை இருந்தார்.

போலீஸ்காரர் கைது
இதையடுத்து சிறுமியை அவரது தந்தை பெங்களூர் அழைத்து வந்தார். இதற்கிடையே சிறுமி வீட்டில் இருந்து வெளியேறிய தினமே போலீசில் அவர் மாயமானதாக புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது போலீஸ்காரர் பவன் தனக்கு செய்த கொடுமையை அழுதபடி கூறினார். மேலும் சிறுமி சார்பில் போலீஸ்காரர் பவன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ்காரர் பவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது சஸ்பெண்ட் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications